Skip to main content

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்!

Published on 20/01/2021 | Edited on 21/01/2021

 

us president and vice president swearing ceremony

அமெரிக்க நாட்டின் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்.

 

வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமெரிக்காவின் 49 ஆவது துணை அதிபராக  கமலா ஹாரிஸ் பதவியேற்றுக் கொண்டார். கமலா ஹாரிஸுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோடோமேயர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் கமலா ஹாரிஸ். இவர் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 

us president and vice president swearing ceremony

இந்த பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்களான பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், ஒபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமெரிக்க அதிபர், துணை அதிபர் பதவியேற்பு விழாவையொட்டி, வாஷிங்டனில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 25,000 வீரர்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

இதனிடையே, அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முக்கிய தலைவரைக் கொன்ற புதின்? நெருக்கடியில் ரஷ்யா!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

ரஷ்யாவில் அதிபர் புதின் அரசின் மீது எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். 47 வயதாகும் அலெக்ஸி நவல்னி எதிர்கால ரஷ்யா என்ற புதிய கட்சியை தொடங்கி புதினைத் தொடர்ந்து விமர்சனம் செய்தும், ரஷ்ய மாகாணங்களில் நடைபெறும் ஊழல் குறித்தும் தன்னுடைய இணையப் பக்கத்தில் எழுதி வந்தார். இதனால் ரஷ்ய மக்களிடையே பிரபலமானார். கடந்த அதிபர் தேர்தலில் புதினுக்கு எதிராக அலெக்ஸி நவல்னி போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் தேர்தலின் போது புதினுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். 

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும் போது அலெக்ஸி நவல்னி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனை ஜெர்மனி அரசு உறுதி செய்ததோடு, விஷம் வைக்கப்பட்டதில் ரஷ்ய அரசுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக ரஷ்ய அரசு மறுத்தது. 

இதனைத் தொடர்ந்து 5 மாத சிகிச்சைக்குப் பிறகு ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவல்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அலெக்ஸி நவல்னிக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி அவற்றிற்கு நிதியுதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு மேலும் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள ஆர்க்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அலெக்ஸி நவல்னி உயிரிழந்துள்ளார். சமீப காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயங்கி விழுந்து சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவரது இறப்பிற்கான காரணம் வெளியிடப்படவில்லை. அலெக்ஸி நவல்னியின் மனைவி, புதின் தான் தனது கணவர் இறப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு நீதிகேட்டு பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதின் திட்டமிட்டு கொலை செய்துவிட்டார். இது ரஷ்ய அரசின் எதேச்சதிகாரப் போக்கு” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

US President Joe Biden said that Putin responsible for Navalny passed away

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “அலெக்ஸி நவல்னியின் மரணம் குறித்து நான் உண்மையில் ஆச்சரியம் அடையவில்லை. புதின் அரசாங்கம் செய்யும் ஊழல் மற்றும் அனைத்து மோசமான செயல்களையும் அவர் தைரியமாக எதிர்த்தார். பதிலுக்கு, புதின் அவருக்கு விஷம் கொடுத்தார், அவரைக் கைது செய்தார். புதினால் இட்டுக்கட்டப்பட்ட குற்றங்களுக்காக நவல்னியின் மீது வழக்கு தொடர்ந்தார். தனிமைப்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைத்தார்.  அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு புதின் தான் பொறுப்பு” என தெரிவித்துள்ளார். அலெக்ஸியின் மரணம் தற்போது புதினின் ரஷ்ய அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

குடியரசு துணைத் தலைவரை வரவேற்ற தமிழக அமைச்சர்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
 Minister of Tamil Nadu welcomed the Vice President

குடியரசு துணைத் தலைவர் 29 ஆம் தேதி காலை 8 மணிக்கு குடும்பத்தினருடன் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில் தரிசனம் செய்வதற்கு 2 ஹெலிகாப்டர் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தடைந்தார்.

தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, தமிழகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்பதை தெரிவித்து தமிழக முதல்வரின் சார்பாக வரவேற்றார். இதனைத் தொடர்ந்து  அவருடன் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். கோவில் வாயிலிருந்து கோவிலில் உள்ள 21 படி வரை மின்கல வாகனத்தில் சென்றார். பின்னர் குடும்பத்துடன் கோவில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். துணை குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செய்தியாளர்களுக்கு அனுமதி  இல்லை. இவர் வருகையையொட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்கள் யாரையும் காலை 7:00 மணி முதல் 11 மணி வரை அனுமதிக்கவில்லை. மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, தரிசனம் செய்வதற்குத் தமிழக அரசு மற்றும் அமைச்சர், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியதற்காக குடியரசு துணைத் தலைவர்  நன்றி தெரிவித்துச் சென்றார்.