Skip to main content

வாக்காளர்களை பரிசுகளுடன் சந்தியுங்கள்! - பாஜகவினருக்கு அமைச்சர் தந்த அறிவுரை

Published on 11/02/2018 | Edited on 11/02/2018
Patil

 

தேர்தலுக்கு முன்பாக வாக்காளர்களைச் சந்திக்கும் போது வெறும் கையோடு செல்லாமல், பரிசுகளோடு செல்லவேண்டும் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மிராஜ் குப்வாட் மாநகராட்சிக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் குறித்த பாஜகவின் திட்டமிடல் கூட்டம் நேற்று முன்தினம் சாங்லியில் வைத்து நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அம்மாநில வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், ‘தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு விட்டன. நம் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் வேலைகளில் சிறப்பாக செயல்பட வேண்டும். குறைந்தது 200 குடும்பங்களையாவது நேரில் சந்தித்து அவர்களோடு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். வாக்காளர்களைச் சந்திக்கும்போது வெறும் கையில் செல்லாமல், பரிசுகளோடு செல்லவேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான தனஞ்செய் முண்டே, ‘பாஜகவும், சிவசேனாவும் தகாத முறையில் சேர்த்த பணத்தை தேர்தலில் பயன்படுத்தப் பார்க்கின்றன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

"பாஜக கூட்டணியில் இணைந்தால் உரிய மரியாதை"- சரத்பாவருக்கு ராம்தாஸ் அத்வாலே அழைப்பு!

Published on 23/11/2019 | Edited on 23/11/2019

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் சிவசேனாவுக்கும் பாஜகவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இருந்து பிரிந்தன. இதன் காரணமாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 

Ramdas Atwale

 

இந்நிலையில் நேற்று காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் , சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேலையில், எதிர்பாராத விதமாக இன்று காலையில் ஆளுநர் முன்னிலையில் மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர். 

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இது மகாராஷ்டிரா அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இணைந்தால், அவருக்கு உரிய கவுரவம், அங்கீகாரம் வழங்கப்படும்" என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.  

Next Story

அமித்ஷா எனக்கு மாநிலங்களவை பதவி வழங்குவதாகக் கூறினார்! - நாராயண் ரானே

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

அமித்ஷா தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதி அளித்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், மகாராஷ்ட்ரா ஸ்வபிமான் பாக்ஸ் கட்சியின் தலைவருமான நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

 

Rane

 

கடந்த புதன்கிழமை பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுக்கான கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது டெல்லியில் இருந்த நாராயண் ரானே மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உதவியுடன் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளார். புதன் கிழமை இரவு நடந்த இந்த சந்திப்பு குறித்து நாராயண் ரானே, ‘அமித்ஷா என்னிடம் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா எனக் கேட்டார். நான் 2019ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் டெல்லிக்கு செல்லவேண்டும் என நினைத்திருந்தேன். அமித்ஷாவின் சலுகை குறித்து நான் இன்னமும் முடிவு செய்யவில்லை. அவரிடம் இதுகுறித்து யோசிக்க எனக்கு அவகாசம் வேண்டுமெனக் கூறிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.

 

நாராயண் ரானேவின் இந்தக் கருத்து குறித்த விளக்கங்களோ, இதை உறுதிப்படுத்தும் விதமான தகவல்களோ பா.ஜ.க. தரப்பில் இருந்து இன்னமும் பெறப்படவில்லை. மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 12ஆம் தேதியோடு நிறைவுபெறுகிறது. 23ஆ தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.