Skip to main content

சூளகிரி அருகே விவசாயி வெட்டி படுகொலை! மர்ம கும்பல் தப்பி ஓட்டம்!!

Published on 14/05/2020 | Edited on 14/05/2020
krishnagiri district shoolagiri


சூளகிரி அருகே, விவசாயியை அவருடைய வீட்டு வாசலிலேயே மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள கொம்மேபள்ளி அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (34). விவசாயி மற்றும் சொந்தமாக டெம்போ வாகனம் வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி பாக்கியம். சந்தோஷ் என்ற மகனும், சுகன்யா என்ற மகளும் உள்ளனர். 

புதன்கிழமை (மே 13) இரவு முனிராஜ் தனது மகனுடன் சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினார். மகன் மட்டும் வீட்டுக்குள் சென்றுவிட, முனிராஜ் வாசலில் நின்று கொண்டிருந்தார்.


அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர், முனிராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவருடைய தலை, முகம், கை ஆகிய பகுதிகளில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. தாக்குதல் நடத்திவிட்டு மர்ம கும்பல் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றது. 

முனிராஜின் அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். அங்கே அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உத்தனப்பள்ளி காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 


உள்ளூரில் முனிராஜ், ஒரு குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். அதே குவாரியில் இன்னொரு தரப்பினரும் கற்களை வெட்டி எடுத்து வந்தனர். இதில் இருதரப்புக்கும் சில மாதத்திற்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதல் பின்னணியில் முனிராஜை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. இது தொடர்பாக அனுமந்தபுரத்தை சேர்ந்த 5 பேரை சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்