
ஓடும் பேருந்தில், உணவைச் சிந்தியதற்காக இரும்பு கம்பியால் ஆணுறுப்பைச் சிதைத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி பவானாவில் உள்ள டிடிசி டிப்போவுக்குப் பின்னால் ஒரு குளத்தின் அருகே ஒரு ஆணின் உடல் கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த ஆணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவில், பாதிக்கப்பட்டவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பாதிக்கப்பட்டவர் மனோஜ் என்று தெரியவந்தது. இதனையடுத்து, உடல் இருந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. அதில், சந்தேகத்திற்கு இடமான ஆர்.டி.வி பேருந்து ஒன்று இருந்தது. அந்த பேருந்து ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான செய்தி வந்தது.
கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி பாதிக்கப்பட்ட மனோஜ் மதுபோதையில், பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். மேலும், தான் எடுத்து வந்த உணவைச் சாப்பிட்டுள்ளார். பேருந்து நகரும் போது, உணவு தற்செயலாகப் பேருந்தில் சிந்தியது. இதில் கோபமடைந்த பேருந்து ஓட்டுநரும் அவரது நண்பர்களும், மனோஜை தனது சட்டையைக் கழற்றி சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்கு மனோஜ் மறுப்பு தெரிவித்ததால், அவரை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி அவரது ஆணுறுப்பைச் சிதைத்துள்ளனர். இதில் மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், டிடிசி டிப்போவுக்குப் பின்னால் உள்ள குளத்தின் அருகே உடலை வீசிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மனோஜை கொலை செய்த பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு தலைமறைவாக இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.