![Deputy Chief Minister meets Kamal Haasan!](http://image.nakkheeran.in/cdn/farfuture/2O24Sg1Ga6Ya8NZf3RsHXJ6fbt2oPY7VjZtiitZKC84/1739436662/sites/default/files/inline-images/udhay-kamal-meet-art.jpg)
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இணைந்தது. அப்போது அக்கட்சிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக சார்பில் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை சீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
இத்தகைய சூழலில் தான் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் கமல்ஹாசனை திடீரென்று சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படுவது குறித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கமல்ஹாசன் உடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (13.02.2025) சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி மாநிலங்களவை பதவி வழங்குவது குறித்தும், இந்த பதவிக்கு கமல்ஹாசனே போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட உள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகிய இருவரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. மேலும் இது தொடர்பாகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசனை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட கமலுக்கு என் அன்பும், நன்றியும்” எனத் தெரிவித்துள்ளார்.