![Wife hits husband with boyfriend's help in madhya pradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/x1vfYXH9VcXw0w-K36IHi72tOaY6rnfqUyYzK5HC8lo/1739537889/sites/default/files/inline-images/policen_23.jpg)
கணவரை, தனது ஆண் நண்பரை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷாஜாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ் மாளவியா (38). இவருக்கு திருமணமாகி கல்யாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி இருக்கிறார். கல்யாணிக்கு வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம், முகேஷுக்கு தெரியவர தனது மனைவி கல்யாணியை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், தனது உறவுக்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய கல்யாணி, தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவம் நடந்த தினத்தன்று, தனது ஆண் நண்பர் ராகுல் மாளவியா மற்றும் அவரது நண்பர் சுனில் மாளவியாவை தனது வீட்டிற்கு அனுமதித்துள்ளார். வீட்டிற்கு வந்த அவர்கள் இருவரும், முகேஷின் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்து தப்பியோடினர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த போது, ராகுல் மாளவியாவின் விரல் துண்டிக்கப்பட்டு கிடந்துள்ளது. அதனை வைத்து, தலைமறைவாக இருந்த கல்யாணி, ராகுல் மற்றும் சுனில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.