
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் 20 வயது மாணவி. இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவரை ரோஹித் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ரோஹித் அந்த மாணவியை தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று, அந்த மாணவி பரீட்சை முடிந்து கல்லூரியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, ரோஹித் அந்தப் பெண்ணை வழிமறித்து தன்னுடன் பேசுமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரமடைந்த ரோஹித், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண்ணை சுட முயன்றுள்ளார். அப்போது அந்தப் பெண், ரோஹித்திடம் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளார். இதனால் கடுப்பான ரோகித், அந்தப் பெண்ணை தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார், உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி கல்லூரி மாணவி சுட்டுக்கொன்ற ரோஹித்தை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடுரோட்டில், கல்லூரி மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.