காஷ்மீரில் 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை!
தேசிய புலனாய்வு அமைப்பின் சார்பில் காஷ்மீரில் சந்தேகிக்கப்படும் 12 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் கலவரங்களை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிடமிருந்து பணம் பெறுவதாக, சில தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பிற்கு சென்றடைந்தன. இதையடுத்து இன்று காலை ஸ்ரீநகர், பராமுல்லா மற்றும் ஹந்த்வாரா பகுதிகளில் உள்ள 12 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஏழு பேர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கடந்த ஜுலை 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கிடைக்கப்பட்ட தகவல்களின் படி இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.
‘கடந்த ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி ஹிஸ்புல் முகாஜிதீன் அமைப்பின் கமாண்டர் புர்கான் வாணி என்பவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து காஷ்மீர் பகுதிகளில் கலவரங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இருந்து பணம் கைமாறுவதாகவும், அதைப் பயன்படுத்தி கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை ஏவி கல்வீச்சு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்தன. அவர்களின் முக்கிய இலக்குகள் அரசு பள்ளிகளும், நிறுவனங்களுமாகவே இருக்கின்றன. இந்தமாதிரியான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெறுவார்கள்’ என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
- ச.ப.மதிவாணன்