Skip to main content

வயநாடு நிலச்சரிவு எதிரொலி; சபரிமலை நிர்வாகத்திற்கு பறந்த நீதிமன்ற உத்தரவு

Published on 01/08/2024 | Edited on 01/08/2024

 

n

கேரளாவில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை மீட்புப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை அரசு உறுதி வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு கொடுத்துள்ளது.

தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வானது கேரளாவில் சில நாட்களில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் நதிக்கரை ஓரங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இருக்கிறார்கள். அதேபோல அந்த நேரங்களில் முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் படை எடுப்பர். இந்த சூழலில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வரும் ஆகஸ்ட் நான்கு மற்றும் ஐந்தாம் தேதிகளில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வர இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை வரும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கேரளா அரசு மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகம், உள்ளூர் நிர்வாகம் உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பான முறையில் வழிபாடுகளில் நடத்துவதற்கும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்ச்சிகளை செய்து தர வேண்டும் என கேரள காவல்துறைக்கும் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கும் உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. சபரிமலை மட்டுமல்லாது வயநாடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்