![AMMK candidate S Kamaraj health illness](http://image.nakkheeran.in/cdn/farfuture/Zky8DrNgS-sh_1GWInRlflwBc--N8ZlxNiHDhEaePIM/1616471036/sites/default/files/inline-images/th_717.jpg)
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் களத்தில் இல்லாமல் வாக்கு சேகரிப்புகள் நடந்துவருகிறது. மநீம வேட்பாளர்கள் பொன்ராஜ் மற்றும் சந்தோஷ்பாபு ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. டிஆர்பி.ராஜாவும், அதிமுக வேட்பாளராக சிவாராஜமாணிக்கமும், அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் ஆகியோரும் போட்டியில் உள்ளனர். இவர்கள் மட்டுமின்றி மற்ற அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் போட்டியில் உள்ளனர்.
பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடனே தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு இருதய சிறப்பு மருத்துவர் கேசவமூர்த்தி தலைமையிலானோர் பரிசோதனைகள் செய்தனர். அப்போது 4 இடங்களில் அடைப்பு இருப்பதும் அதில் இரு இடங்களில் சற்று கூடுதலான அடைப்புகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது.
![AMMK candidate S Kamaraj health illness](http://image.nakkheeran.in/cdn/farfuture/HLQ95Hl75dyDT_JdXlnihkdacA-2tbv_CyZZDQrD3tk/1616471064/sites/default/files/inline-images/th-1_864.jpg)
தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் எஸ். காமராஜ். இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் வீடு திரும்பினாலும் முழு ஓய்வு தேவை என்பதால் அமமுகவினர் அக்கட்சியின் வேட்பாளர் இல்லாமல் தொடர்ந்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இதனால் பலன் கிடைக்கும் என்கிறார்கள் அமமுகவினர்.