Skip to main content

“தமிழ்நாட்டின் நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம்” - செல்வப்பெருந்தகை

Published on 10/02/2025 | Edited on 10/02/2025

 

Selvaperunthagai said diversion of TN funds to other states is the height of anarchy

மத்திய அரசும் மாநில அரசும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும்  60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் இந்த திட்டத்துக்கு ஒரு ஆண்டுக்கு மொத்த செலவான ஒரு குறிப்பிட்ட தொகையை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் தொடர்ந்து மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசிடம் இருந்த் வழங்கப்பட வேண்டிய நிதி வராததால் தமிழத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தினால்தான் நிதி ஒதுக்கமுடியும் என்று வறுபுறுத்துவதாக அமைச்சர்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஒன்றிய அரசின் கொள்கையுடன் ஒத்துப்போகாத மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது ஆளும் பாசிச பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட இதுவரை நிதி ஒதுக்கவில்லை. தற்போது தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அராஜகத்தின் உச்சம். தமிழ்நாடு மாணவர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் இந்த பழிவாங்கும் போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஆளும் பா.ஜ.க. அரசின் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் வரி செலுத்துவதற்கேற்ப ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கேட்பது அற்ப சிந்தனை என்று கூறியுள்ளார்.தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விட்டிருப்பது அற்ப சிந்தனை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

சார்ந்த செய்திகள்