Skip to main content

‘இது என்ன பிரமாதம், இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு’ - செல்லுராஜு கலகலப்பு

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

sellur raju Propaganda erode east byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 20 ஆம் தேதி(நேற்று) ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அந்தோணியார் வீதி என்ற பகுதியில் பொதுமக்களிடம் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே அங்கு அதிமுகவினர் மக்களை கொண்டு வந்து உட்கார வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் அங்கு வந்த செல்லூர் ராஜு மக்களிடம் பேசத் தொடங்கினார் அப்போது அவர், “எல்லோரும் நல்லா இருக்கீங்களா? ஈரோடு நல்ல ஊருங்க; இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போன்று இதுவரை நான் ஒரு தேர்தலையும் பார்க்கவில்லை. இந்த தேர்தலை பார்க்க அதிசயமாக இருக்கு. அமைச்சர்கள் அனைவரும் காரில் பவனி வருகிறார்கள். தலைமைச் செயலகத்துக்கு சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது எளிதாக பார்க்க முடிகிறது. ஈரோடு மக்கள் அன்பானவர்கள், பாசமானவர்கள். கோபப்பட்டால் கூட அன்பாக பதில் சொல்லக்கூடியவர்கள். நீங்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட தயாராகி விட்டீர்கள். 19 ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல்ஹாசன் இந்திய தேசத்திற்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்ன அச்சுறுத்தல் வந்துவிட்டது? பாகிஸ்தான் நம் மீது படையா எடுக்கப் போகிறது?  

 

கமல்ஹாசன் நல்ல நடிகர். அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்துள்ளேன். நன்றாக நடித்துள்ளார். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு. எல்லாராலும் எம்ஜிஆர் போல் ஆகிவிட முடியாது. கமலஹாசன் சினிமாவில் கால்ஷீட் கொடுப்பது போல் ஒருநாள் பிரச்சாரத்திற்கு கால் சீட் கொடுத்துள்ளார். நடிகர்  சிவாஜியே கட்சியை தொடங்கி அது சரிப்பட்டு வராததால் கலைத்து விட்டார், இவர் எம்மாத்திரம். சினிமா போர்வையில் மக்களை ஏமாற்றுகிறார். அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்து உள்ளது. மக்கள் மீது எந்த ஒரு வரியும் திணிக்கவில்லை. திமுக ஆட்சி ஏற்றதும் சொத்துவரி, மின் கட்டண,  பால் விலையை உயர்த்தி விட்டது. இந்த ஆட்சியால் நீங்கள் தவித்து வருகிறீர்கள். மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதிமுகவின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். கொரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்து இருந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சென்று மக்களைச் சந்தித்தார். 

 

பல்வேறு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தது. ஆனால் மு.க ஸ்டாலின் வீடியோ கால் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினருக்கு தகுந்த பாடம் புகட்டி அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறிய செல்லூர் ராஜ் பிறகு கூட்டத்திலிருந்த பெண்களைப் பார்த்து "என்ன வேலை செய்றீங்க? என்று கேட்டார் அதற்கு ஒரு பெண் "விவசாய வேலைக்கு போவோம், கூலி வேலைக்கும் செல்வோம்" என்றார். "நல்லது... நல்லது..." என்ற செல்லூர் ராஜு அங்கிருந்து கிளம்பினார்.

 

அதேபோல், ஈரோடு மரப்பாலம் பகுதியில் செல்லூர் ராஜூ ஒரு வீட்டின் முன்பாக அமர்ந்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது  கரும்பலகையில் இன்றைய விலைவாசி உயர்வு குறித்து எழுதி மக்களுக்கு இதனால் கூடுதலாக எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து பள்ளி ஆசிரியர் பாடம் நடத்துவது போல குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தம்பி நானே தயாரித்த என் சொந்த ஸ்கிரிப்ட். நான் நிறைய சிந்திப்பேன். இது போன்று நிறைய வைத்துள்ளேன். ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன்” எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்