
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் நிறுவனரும், நடிகரும், அவரது கணவருமான மறைந்த விஜயகாந்த்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான நட்பு குறித்து ஆங்கில வடிவிலான வீடியோ ஒன்றை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்ட போது ஒரு சகோதரரைப் போலக் கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதனைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர். நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாகக் கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம். சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காகப் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.