
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக கட்சியின் முக்கிய தலைவர்கள், தமிழகம் முழுக்க அவர்கள் கட்சி வேட்பாளர்களையும், அவர்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், “அதிமுகவை குறித்து அவதூறாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் மு.க.ஸ்டாலின். முதலமைச்சராகி தாக்குப்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. என் அனுபவத்தில் நான் அனுபவித்துவிட்டேன் எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா. தினம் ஏதாவது ஒரு போராட்டத்தை அறிவித்து ஒரு நாள் கூட நிம்மதியாக தூங்கவிடமாட்டாங்க. உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் இரும்ப பழுக்க பழுக்க காய்த்து அடித்து உறுதிப்படுத்துவது போல், இவர்கள் நடத்திய போராட்டத்தை எல்லாம் சந்தித்து சந்தித்து இரும்பை போல் உறுதியாகிவிட்டேன். இனி ஸ்டாலின், அசைத்துக்கூட பார்க்க முடியாது” என்று பேசினார்.