
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 30வது போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14.04.2025) இரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பு 166 ரன்களை குவித்தது.
அதாவது லக்னோ அணியில் அதிகபட்சமாக ரிசப் பந்த் 49 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். மிட்சல் மார்ஸ் 25 பந்துகளில் 30 ரன்களையும், ஆயுஷ் பதோனி 17 பந்துகளில் 22 ரன்களையும் எடுத்தனர். எனவே சென்னை அணி வெற்றி பெற 167 ரன்களை லக்னோ அணி இலக்காக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிய இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. அதன்படி சென்னை அணி 19 ஓவர்கள் 3 பந்துகளில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை விளாசி வெற்றி பெற்றது.
சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 43 ரன்களை குவித்தார். ரச்சின் ரவிந்தரா 22 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். மேலும் சாயிக் ரசீத் 19 பந்துகளில் 27 ரன்களையும் குவித்தார். இதன் மூலம் லக்னோ அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றியையும், 5இல் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது.
அதே சமயம் லக்னோ அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றியையும், 3இல் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கையில் காயம் அடைந்திருந்தார். இதனையடுத்து அந்த அணிக்கு கேப்டனாக தோணி நியமிக்கப்பட்டிருந்தார். இந்த ஐ.பி.எல். தொடரில் தோணி கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு சென்னை அணி விளையாடிய இரண்டாவது போட்டி இதுவாகும். முதல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது அற்புதமான ஆட்டத்திற்காக இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதைச் சென்னை அணியின் கேப்டன் தோனி வென்றார். தோனி இந்த போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்க்காமல் 11 பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.