![farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/LXoqdHVKfGnwb0ZgiseHBAcjC96bdRNYCcsjv6yp9ds/1611203017/sites/default/files/inline-images/puj-im_2.jpg)
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஒன்பது கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தாலும், இதுவரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான 10வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (20.01.2021) நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு நிறுத்தி வைக்க தயார் என கூறியுள்ளது. விவசாயிகள் இதுகுறித்து ஆலோசனை செய்துவிட்டு முடிவை தெரிவிப்பதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், "விவாதத்தின்போது வேளாண் சட்டங்களை ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக நாங்கள் தெரிவித்தோம். இதை விவசாய சங்கங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. விவசாயிகள் இதுகுறித்து நாளை (21.01.21) ஆலோசித்து, வரும் 22 ஆம் தேதி முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேச்சுவார்த்தை சரியான பாதையில் செல்வதாகவும், 22 ஆம் தேதி தீர்வு எட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.