
தங்களது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, கத்தியால் கழுத்தை அறுத்து தம்பதி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் ஷிவ்லால். இவருடைய மனைவி ஜாட்னோ தேவோ. இவர்களுக்கு ஹரீஷ் (9) என்ற மகனும், கிரண் (5) மற்றும் நத்து (3) என்ற இரண்டு மகள்களும் இருந்தனர். இந்த நிலையில், நேற்று இரவு ஷிவ்லாலுக்கும் அவருடைய மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் விரக்தியடைந்த தம்பதி இருவர், தங்களது 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தனர். இதையடுத்து, அவர்களின் கை நரம்புகளை பிளேடால் அறுத்து பின்னர், குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். அதன் பிறகு, தங்களின் கைகளை அறுத்து தம்பதி இருவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வீட்டு வாசலில் ரத்தத் துளிகள் இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, குழந்தைகள் 3 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்கொலைக்கு முயன்ற தம்பதி இருவரும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.