Skip to main content

எதிர்ப்புகளைக் கடந்து நடைபெற்ற விசாரணை! - ஆசிஃபாவுக்கு நீதி கிடைக்குமா?

Published on 13/04/2018 | Edited on 13/04/2018

ஜம்மு சிறுமி ஆசிஃபா கொலைவழக்கில் பல்வேறு எதிர்ப்புகளைக் கடந்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

 

Asifa

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம், ரஸானா கிராமத்தில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஆசிஃபா எனும் 8 வயது சிறுமி வனப்பகுதியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். இந்தப் படுகொலையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தநிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணை நடத்திவந்த காவல்துறை, நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவிற்கு முன்பாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தக் குற்றப்பத்திரிகை, சிறுமி ஆசிஃபா எந்தளவிற்கு மிகக்கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்டார் என்பதை விளக்குகிறது.

 

இந்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவிடாமல் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ‘இந்து ஏக்தா மன்ச்’ என்ற அமைப்பின் சார்பில் தேசியக்கொடி ஏந்தி நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மாநில அமைச்சர்கள் சவுத்ரி லால் சிங் மற்றும் சந்தெர் பிரகாஷ் கங்கா ஆகியோர் கலந்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் உறையச் செய்தது. மேலும், இதனால் காவல்துறையினரின் விசாரணையிலும் மிகப்பெரிய தடைகள் உருவானது.

 

Asifa

 

இந்த வழக்கை மூடிமறைக்க பல முயற்சிகள் நடந்தும், இதன் பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதை உணர்ந்த காவல்துறை குற்றப்பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார் ஜல்லா மிகத்தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கிறார். இவர் தனது விசாரணை தொடர்பான குற்றப்பத்திரிகையை கடந்த 9ஆம் தேதி, அதாவது நீதிமன்றம் விதித்திருந்த 90 நாட்கள் காலக்கெடுவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணைக் குழுவில் மிகக்கடுமையான வழக்குகளில் தீர்வு காண்பதில் திறமைவாய்ந்த நவீத் பீர்ஜாடா என்பவரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் மிக முக்கியமான தடயமாக இருந்தது சிறுமியின் உடையில் இருந்த சகதிதான். அவை சிறுமி கிடந்த பகுதியில் இருக்கும் சகதியோடு ஒத்துப்போகவில்லை என்பதால், இதை முக்கிய தடயமாக காவல்துறையினர் எடுத்துக்கொண்டனர். ஆனால், மற்ற புகைப்படங்களில் சிறுமியின் உடையில் இருந்த சகதி காணாமல் போனநிலையில், தடயங்களைக் களைய காவல்துறையினரே உதவியிருப்பது தெரியவந்தது. மேலும், சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் கோவிலில் அது தொடர்பான எந்தத் தடயமும் முதலில் கிடைக்கவில்லை. ஆனால், முக்கியக்குற்றவாளி சாஞ்சி ராமின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில் அறையில் 8 விதமான தலைமுடிகள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் ஒன்று சிறுமி ஆசிஃபாவின் தலைமுடியோடு ஒத்துப்போனது. அதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

விசாரணை நடத்தச்சென்ற காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, குற்றவாளிகளோடு சேர்ந்து சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்துவிட்டு, தனது இடது தொடை மீது சிறுமியின் கழுத்தை வைத்து நெறித்துள்ளார். அது தோற்றுப்போகவே, குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் அந்தச் சிறுமியின் கழுத்தை துணியால் நெறித்துள்ளான். அதிலும் திருப்தியடையாத அவர்களால்  சிறுமியின் தலைப்பகுதி இரண்டு முறை பாறையொன்றில் மோத வைக்கப்பட்டுள்ளது. சிறுமி கடத்தப்பட்ட முதல்நாளில் பாங்க்ரா எனும் போதைப் பொருளும், மற்ற நாட்களில் நீண்ட நேரத்திற்கு மயக்கம் தரும் குளோனாஜிபம் எனும் போதைமருந்தும் கொடுக்கப்பட்டதாக குற்றப்பத்திரிக்கை தெரிவிக்கிறது.

 

இந்த வழக்கில் தொடர்புடைய 8 குற்றவாளிகளும் காப்பாற்றப் படுவதற்கான வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் சூழலிலும், துணிச்சலாக அவற்றை எதிர்கொண்டு காவல்துறை விசாரணை நடத்திவருகிறது. அரசியல் தலையீடுகளை முறியடித்து நடத்தப்படும்  நீதிப்போராட்டம் நிச்சயம் வெல்லவேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

காஷ்மீரில் முழங்கிய பிரதமர்; சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் முதல் பயணம் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Prime Minister in Kashmir and First trip after cancellation of special status

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கி வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு கொடுக்கப்பட்டாலும் எதிர்ப்பும் கிளம்பியது. 

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் பலமுறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தற்போது வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்து 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழக்கின் தீர்ப்பை கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வழங்கியது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யா காண்ட் ஆகிய மூவரும் ஒரே மாதிரியான தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 3 நீதிபதிகளின் தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதற்கடுத்ததாக நீதிபதி சஞ்சிவ் கன்னா இந்த இருவிதமான தீர்ப்புகளை ஏற்பதாக ஒரு தீர்ப்பை வழங்கினார். சட்டப்பிரிவு 370 செல்லும் என்று மூன்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளதாலும், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளதாலும், மற்றொரு நீதிபதி இரண்டு தீர்ப்புகளுக்கு உடன்படுவதாகவும் கூறியுள்ள நிலையில், 3:2 என்ற அடிப்படையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  ஜம்மு - காஷ்மீர் வழங்கி வந்த சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதல் முறையாக காஷ்மீர் சென்றார். விமானம் மூலம் காஷ்மீரின், ஸ்ரீநகர் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ராணுவத்தின் சின்னர் கிராப்ஸ் படைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

அதன் பின்னர், ஸ்ரீநகர் பஷி மைதானத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜம்மு - காஷ்மீரில் ரூ.6,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் கிரீடமாக ஜம்மு காஷ்மீர் திகழ்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கான காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. இந்த புதிய காஷ்மீருக்காக பல ஆண்டுகளாக காத்திருந்தோம். காஷ்மீர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே மோடியின் கியாரண்டி ஆகும். மக்கள், ஜம்மு - காஷ்மீர் வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும். இப்போது, உலகம் முழுவதும் உள்ள பெரிய பிரபலங்களும் ஜம்மு காஷ்மீருக்கு தைரியமாக வருகிறார்கள்” என்று கூறினார். 

Next Story

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
A freight train ran without a driver

ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

ஓட்டுநர் இல்லாமல் மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும் சரக்கு ரயில் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சரக்கு ரயில் எஞ்சினில் கை பிரேக்கை இழுக்க மறந்து ஓட்டுநர்கள் இறங்கிச் சென்றதாலும், தண்டவாளம் சரிவு காரணமாக ரயில் தானாகப் புறப்பட்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதே சமயம் லந்தர் - பதான்கோட் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் உள்ள அனைத்து கிராசிங்குகளும் உடனடியாக மூடப்பட்டன. இதன் காரணமாக எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஜம்மு கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.