
தென்னாப்பிரிக்கா நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கரோனா உலகமெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஸ்பைக் ப்ரோட்டினில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகளுடன் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளைக் கொண்டுள்ள இந்த ஒமிக்ரான், இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கரோனா அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் பிரான்ஸ் நாட்டில் 46 மரபணு பிறழ்வுகளுடன் புதிய வகை கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 பேருக்கு இந்தப் புதிய வகை கரோனா உறுதியாகியுள்ளது. இந்தப் புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யபட்ட முதல் நபர் ஆப்ரிக்க நாடான கேமரூனுக்கு சென்று திரும்பியுள்ளதால், அந்தநாட்டில் இந்தப் புதிய வகை கரோனா உருவாகியிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
46 மரபணு பிறழ்வுகள் இருப்பதால், இந்தப் புதிய வகை கரோனா வேகமாகப் பரவக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. அதேநேரத்தில் இந்த வைரஸின் தண்மை குறித்து தற்போது கணிக்க முடியாது என நிபுணர்கள் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.