Skip to main content

தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கை வைத்துக் கொண்டு குற்றங்களை கலையமுடியாது;மாற்றத்தை கல்வியிலிருந்து தொடங்க வேண்டும்-சீமான்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக  மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டு வரி உள்ளிட்டவற்றிற்கு அரசின் அனுமதிபெற்று சென்னை - கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி கடந்த 12-10-2018 அன்று தமிழக அரசு, மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி அவசர அவசரமாக அனைத்து வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கியது. வீடிழந்த நிலையில் இருக்க இடமின்றி ஆதரவற்று துயருற்று நிற்கும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 16-10-2018 செவ்வாய்க்கிழமை மாலை 04 மணியளவில் அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

seeman

 

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில் கூறியதாவது,

 

நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டியக் கட்டிடங்களை அப்புறப்படுத்தக் கூறும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துகிறோம் என்கிற பெயரில், அம்பத்தூரிலுள்ள முத்தமிழ் நகர், கங்கை நகர், மூகாம்பிகை நகர், கள்ளிக்குப்பம் போன்றப் பகுதிகளில் 589 வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டது தமிழக அரசு. 25 ஆண்டுகளாக அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்விடங்களை ஏரிகளை விரிவாக்கம் செய்கிறோம் எனக் கூறி தகர்த்திருக்கிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக அம்மக்கள் அங்கு குடியிருந்தபோது அது ஆக்கிரமிக்கப்பட்டது என அதிகாரிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தெரியாதா? அவர்கள் ஆக்கிரமித்தார்கள் என்றால் அவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் அனுமதி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை வழங்கியது அரசுதானே? அப்போது தெரியாதா இவர்களுக்கு இது ஆக்கிரமிக்கப்பட்ட நிலமென்று?

 

seeman



சாலையை இட்டு கழிவுநீர் வடிகால் அமைத்து தெருவிளக்குகளை அமைத்துக் கொடுத்து மக்களிடம் வரி வசூல் செய்த அரசு, திடீரென்று வந்து நின்று வீடுகளை இடிப்பது என்பது ஏற்புடையதா? பொருட்களையும், உடைமைகளையும் எடுத்துக் கொள்ளக்கூடக் காலநேரம் அளிக்காது அவசர அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன? மக்களின் வாழ்விடம் இங்கிருக்கும்போது அவர்களைப் பெரும்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்தால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாதா? படித்துக் கொண்டிருக்கிற 500க்கும் மேற்பட்ட மாணவப்பிள்ளைகளின் கல்வி வீணாகிவிடாதா? குறைந்தபட்சம், இப்பகுதிக்கு அருகிலேயாவது வீடுகளைக் கட்டிக் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் போராடுகிறோம். மேலும், வீடுகளோடு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவைகளையும் இழந்துவிட்ட மக்களுக்கு உடனடியாக அதனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

 

seeman



ஏறக்குறைய ஒரு கோடி வடவர்கள் தமிழகத்தில் குடியேறிவிட்டார்கள். அவர்களுக்கு குடியேறிய இரு மாதங்களில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிடுகிறது. ஆனால், கேரளாவில் 15 ஆண்டுகள் வசித்தால்தான் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இவ்வாறு வடவர்கள் அதிகப்படியாகக் குடியேறுவதால் தமிழர்களுக்கான அதிகாரத்தைத் தமிழர்கள் அல்லாதோர் தீர்மானிக்கிற நிலை பிறக்கிறது. இதனால், சொந்த நிலத்திலேயே அகதியாக்கப்படும் நிலை தமிழர்களுக்கு உருவாகிற பேராபத்து இருக்கிறது. கோவையில் சசிகுமார் எனும் பாஜக பிரமுகர் இறந்தபிறகு, ஏற்பட்டக் கலவரத்தின்போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையினர் யாரென்று பார்க்கிறபோது பெங்காலியும், பீகாரியும் அதிலிருந்தார்கள் எனத் தெரிய வருகிறது. இதே நிலை நீடித்தால்  நாளை அவர்கள் தமிழர்களை அடித்துத் துரத்துகிற நிலை உருவாகும்.



தமிழக அரசு நினைத்திருந்தால் எவ்வளவோ உரிமைகளை போராடிப் பெற்றிருக்கலாம். ஆனால், அதனை செய்யவில்லை. நீட் தேர்வுக்கெதிராக மக்கள் மனங்களில் இருந்த எதிர்ப்பு நிலையைத் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. தங்கை அனிதாவின் மரணத்திற்குப் பிறகு இருந்த எழுச்சியைப் பயன்படுத்தி, அழுத்தத்தைக் கொடுத்து நீட் தேர்வுக்கு விலக்கினைப் பெற்றிருக்கலாம். ஆனால், இந்த அரசு செய்யாது. இது பாஜகவின் பினாமி அரசு. அவர்கள் அதிகாரத்தை வைத்துக் கொண்டு வெறுமனே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறர்கள்.



பாலியல் சிக்கல்கள் திரைத்துறை மட்டுமல்லாது எல்லாத்துறைகளிலும் இருக்கிறது. அது வெட்கக்கேடானது. இந்தச் சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்டதற்கானச் சான்றுதான் இது. தவறுகள் செய்கிறவர்கள் எல்லோரும் நிறைந்த மதுபோதையில்தான் இருக்கிறார்கள். தெருவுக்குத் தெரு மதுபானக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு இதனை மாற்ற முடியாது. இதற்கெதிரான மாற்றத்தைக் கல்வியிலிருந்து தொடங்க வேண்டும். கல்வி என்பது வாழ்க்கைக்காகவும், ஒழுக்கத்திற்கானதாகவும் இருக்க வேண்டும். குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதைவிடுத்து, குற்றத்திற்கானக் காரணத்தைத் தூக்கிலிட வேண்டும் என்கிறார் ரூசா. எனவே, இக்குற்றத்திற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிந்து இதற்கெதிரான மாற்றத்தை ஒவ்வொருவரும் முன்னெடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்