![Elderly couple found lose their live near waterfall; Forest Department investigating](http://image.nakkheeran.in/cdn/farfuture/nHdRCWjxS-2qPo8b6OL2a_X7ARfG8thDrCuE_E3DjJc/1739454811/sites/default/files/inline-images/a2543.jpg)
கொடைக்கானல் நீர்வீழ்ச்சி அருகே தம்பதி இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி வனப்பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்குச் சென்ற வனத்துறையினர் சம்பவ இடத்தில் பார்த்த பொழுது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.
இருவரும் வயதான தம்பதிகள் என்பது தெரியவந்தது. உடனடியாக இரண்டு உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்து கிடந்த ஆண் நபரின் சட்டைப் பையில் ஏதேனும் அடையாளம் கண்டறிவதற்கான அடையாள அட்டைகள் இருக்கிறதா என போலீசார் சோதனை செய்த பொழுது அவருடைய சட்டைப் பையில் 9,580 ரூபாய் பணம் இருந்தது. இருவரும் இறந்து கிடந்த பகுதிக்கு அருகிலேயே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் நடந்தது தற்கொலை என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.