![Vijayadharani meeting with BJP National President JP Natta](http://image.nakkheeran.in/cdn/farfuture/wQjgJXY3bUTmz-lEtMmnCua31x-A1KIq_2ejj3dsB28/1708795053/sites/default/files/inline-images/vijayatharani-art-bjp--jp-natta.jpg)
கடந்த மூன்று முறை தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் விஜயதாரணி. இவர் பா.ஜ.க.வில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணி வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். அந்த பதவியும் கிடைக்காமல் போன பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.
அதே சமயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் அவர் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், இன்று (24.02.2024) பிற்பகல் 2 மணியளவில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பொதுவாக சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தால் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்திப்பது வழக்கம். அதேபோல் விஜயதாரணியும் ஜே.பி. நட்டாவை சந்திப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை, பாஜகவில் இணைந்த விஜயதாரணி சந்தித்து கட்சியில் இணைந்ததற்காக வாழ்த்து பெற்றுள்ளார்.