Skip to main content

“மக்கள் அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது” - நயினார் நாகேந்திரன்!

Published on 13/04/2025 | Edited on 13/04/2025

 

Nayinar Nagendran says No one can change the verdict given by the people

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரின் பதவி காலம் முடிந்ததை ஒட்டி, புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்    நேற்று முன்தினம் (11.04.2025) நடைபெற்றது. இதில்அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (12.04.2025) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதற்கான வெற்றிச் சான்றிதழை தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி வழங்கினார்.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “நம்மைப் பார்த்து ‘பொருந்தாக் கூட்டணி’ என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள். ஆம் இது திமுகவுக்கு பொருந்தாக் கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் முதல்வர் மு.க. ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது. இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு ஆட்சியை வேரறுக்கப் போகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது.இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும். பதற்றம் வேண்டாம், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே. இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள். ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்