Published on 03/07/2019 | Edited on 03/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் கொடுக்கப்பட்டன. இதில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் முடியும் நிலையில் உள்ளது. இதனால் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்களை தேர்ந்த்தெடுக்க முடியும். இந்த நிலையில் திமுக சார்பில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதனால் மன்மோகன் சிங்கிற்கு தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி ஆகும் வாய்ப்பு இல்லை என்று உறுதியானது. இதனால் காங்கிரஸ் ஏமாற்றம் அடைந்தது. இந்த நிலையில் மதன்லால் சைனி எம்.பி மறைவை அடுத்து ராஜஸ்தானில் ஒரு இடம் காலியானது. எனவே ராஜஸ்தானில் இருந்து மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப் போவது உறுதியானது. ராஜஸ்தானில் ஆளும் கட்சியாக தற்போது காங்கிரஸ் இருப்பதால் மன்மோகன்சிங் ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்படுவதில் எந்தவித பிரச்சனை இல்லை என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.