கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி அவரது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் திருமாவளவன் இந்த தொகுதியில் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் பண்புமிக்கவர், கொள்கையுடையவர், ஏழை எளிய மக்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். இவரை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு நன்கு தெரியும்.
அவர் மீது இந்த தொகுதியில் அவதூறு பிரச்சாரத்தை சில தீய சக்திகள் பரப்பி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. மோடியை குறை கூறிப் பேசினால் அவர் ஒரு சமூகத்தை குறை சொல்வதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி அடையும், 5 ஆண்டு கால ஆட்சியில் சமூகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அவர்களின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மனிதநேயத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.