
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினுடைய ஆட்சி நடைபெற்று வருகிறது. ஹேமந்த் சோரன்அமைச்சரவையில் ஹபீசுல் ஹசன் என்பவர் மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உத்தரகாண்ட் அமைச்சர் ஹபீசுல் ஹசன், “ஷரியது நமக்கு பெரியது. குரான் நம் இதயங்களில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம் கைகளில் உள்ளது. இஸ்லாத்தில், ஷரியத் தான் முதலில் இருக்கிறது, அதன் பிறகு தான் அரசியலமைப்பு இருக்கிறது” என்று பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, சர்ச்சை எழுந்துள்ளது. அரசியலமைப்பை அவமதிக்கும் நோக்கத்தில் மாநில அமைச்சர் பேசிகிறார் என்று பா.ஜ.க அவரை குற்றம்சாட்டி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.
சர்ச்சையைத் தொடர்ந்து, நேற்று அமைச்சர் ஹபீசுல் ஹசன் தான் கூறிய கருத்துக்கு விளக்கமளித்தார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “மற்ற மதங்களைப் போலவே ஷரியத், மக்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது, ஆனால் அது அரசியலமைப்பை மீறவில்லை. ஷரியத்துக்கும் ஒரு தனி இடம் உண்டு. மக்கள் ஹனுமானை தங்கள் இதயத்தில் வைத்திருக்கிறார்கள். நானும் இதே போன்ற ஒன்றைச் சொன்னேன். எல்லோரும் அதைத் திரித்து முன்வைக்கிறார்கள். பாபாசாகேப் தனது கையில் அரசியலமைப்பை ஏந்தியிருக்கும் சிலைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்கள் நிதி ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். அவர் எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கினார், அதனால்தான் நாங்கள் முன்னேறி வருகிறோம். ஷரியத் நம் இதயங்களில் உள்ளது, ஆனால் பாபாசாகேப்பின் அரசியலமைப்பு நம் கைகளில் உள்ளது என்று நான் கூறினேன். அரசியலமைப்பு மற்றும் ஷரியத் இரண்டும் சமமாக முக்கியம்” என்று தெரிவித்தார்.
ஷரியத் சட்டம் என்பது இஸ்லாமிய சமூக மக்கள் பின்பற்றக் கூடிய ஒரு இஸ்லாமிய சட்டமாகும். கடவுளின் கட்டளை அடிப்படையில் நெறிமுறைகள் வகுக்கப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.