புதுச்சேரி மாநிலம் பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, அவசர உதவிக்கு ஆம்புலன்ஸை இயக்க டீசல் கூட போட இயலாத நிலையில் பாகூர் தொகுதி மக்களின் உயிருடன் விளையாடும் புதுச்சேரி அரசை கண்டித்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனவேலு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் கடந்த 09- ஆம் தேதி பேரணியாக சென்று பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் நாராயணசாமி பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார். ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சர் நாராயணசாமிக்கு ஆளுமை தன்மை இல்லை என்று பதவி விலக கூறியது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடமும் தனவேலு புகார் மனு அளித்தார்.

அதையடுத்து அவரை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தற்காலிகமாக நீக்கியது புதுச்சேரி காங்கிரஸ் தலைமை. மேலும் கடந்த 29- ஆம் தேதி காங்கிரஸ் அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ தனவேலு ஆயிரக்கணக்கான தொகுதி மக்களுடன் நீதி கேட்டு கண்டன பேரணி நடத்தி, ஆளுநரிடம் மீண்டும் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து 30.01.2010 அன்று அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 'தனவேலுவை சட்டமன்ற உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம்' செய்யுமாறு மனு அளித்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கூறியதால், ஏற்கனவே கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த "பாப்ஸ்கோ" வாரிய தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. தனவேலுவை வாரிய தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு கடந்த 28- ஆம் தேதி முதல்வர் நாராயணசாமி பரிந்துரைத்துள்ளார். அதன் அடிப்படையில் தனவேலு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலாளர் ஆலிஸ்வாஸ் தலைவர் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். அதை ஏற்றுக் கொண்ட கவர்னர் கிரண்பேடி அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே கம்பன் கழக விழாவில் பங்கேற்பதற்காக சபாநாயகர் சிவக்கொழுந்து இலங்கை சென்றுள்ளார். அவர் புதுச்சேரி திரும்பியவுடன் தனவேலு எம்.எல்.ஏவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதையடுத்து தமிழ்நாட்டில் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது போல தனவேலுவையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 12- ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் தனவேலு பங்கேற்க முடியாதபடி அதற்கு முன்பாகவே தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
இன்னும் ஒரு ஆண்டுக்குள் சட்டமன்ற தேர்தல் வர இருக்கின்ற நிலையில் தனவேல் எம்.எல்.ஏவின் பதவியை தகுதி நீக்கம் செய்வதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால் அவரின் பதவியை பறிக்க ஆளும் அரசு உறுதியாக உள்ளது.