
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகுல் அஞ்சல்(21). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் இவர், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரின் காதல் விவகாரமும் பெற்றோருக்கு தெரியவர பெண் வீட்டில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி ராகுல் தனது காதலியான 16 வயது சிறுமியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ராகுலை பார்த்த சிறுமியின் பெற்றோர் அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பிறகு ராகுலின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி கயிற்றால் கட்டி வைத்து கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். அதே போன்று சிறுமியின் உறவினர்களும் ராகுலை செருப்பு, கட்டை, கேபிள் உள்ளிட்டவைகளை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளும் ராகுல் சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்களும் மூலம் அதேபோன்று தாக்கப்பட்டிருக்கிறார். இறுதியாக அவரை நிர்வாணமாகச் சாலையில் ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஆனால் பாதிக்கப்பட்ட இளைஞர் தரப்பில் இருந்து புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதையடுத்து போலீசார் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர் தரப்பில் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்த போலீசார் சிறுமியின் வீட்டை சேர்ந்த 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரியேறும் பெருமாள் படத்தில் வரும் காட்சியை போல காதலியை சந்திக்கச் சென்ற இளைஞரை நிர்வாணப்படுத்தி பெண் வீட்டார் கொடூரமாக தாக்கிய சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.