Skip to main content

 ஆங்கிலம் வழியாக தமிழ் கற்கிறார்கள் 12 லட்சம் தமிழர்கள்! மொரிசியஸ் துணை ஜனாதிபதி பேட்டி 

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

 

tamil

 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மலைப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலில் மொரிசியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி மேதகு. பரமசிவம்பிள்ளை இன்று வையாபுரி குறள் மலையை பார்வையிட்டு பேசுகையில், 
" ஒரு தமிழராக, இந்தியராக, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன். 


உலக பொதுமறையான திருக்குறள் தனி மனித ஒழுக்கத்திற்கான மிகச்சிறந்த வழிகாட்டுதல் நூல் ஆகும். இந்த நூல் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் ஆகும் .

 

இதனை நம் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச்செல்ல மலையப்பாளையம் அருள்மிகு உதயகிரி முத்து வேலாயுத சாமி கோவிலை சுற்றி உள்ள பாறைகளில் 1330 குறள்களையும் விளக்கத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பதித்து குறள் மலை ஆக்குவதின் மூலம் காலத்தால் அழியா புகழை பெற்று வருங்கால சந்ததியர்களுக்கு வழிகாட்டியாக அமையும். இதற்கு உறுதுணையாக மாவட்ட கலெக்டர் பிரபாகர், குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார் செயல்பட்டு வருகின்றனர். இதனை செயல்படுத்த முனையும் தமிழக அரசுக்கு எனது வாழ்த்துக்கள்.

 

இந்த காலத்தால் அழியாத பணிக்கு எங்கள் மொரீசியஸ் அரசின் முழு ஒத்துழைப்பு வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.

 

மொரீசியஸ் நாட்டில் தமிழர்கள் 12 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்கள் தமிழ் மொழியை ஆங்கில மொழி வழியாக கற்கின்றனர். இதனால் தமிழ் மொழியை எழுதவும், படிக்கவும் சிரமப் படுகின்றனர். எனவே மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மூலம் தமிழ் மொழியை கற்பிக்க தேவையான நடவடிக்கை மொரிசியஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.

 

மேலும் தமிழர்கள் பண்டிகையான பொங்கல், சிவராத்திரி, ஏகாதசி உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன. கல்வி, சுற்றுலா, வேளாண் துறைகளில் மொரீசியஸ் நாடு சிறந்து விளக்குகிறது என பெருமை பட பேசினார். தொடர்ந்து நான் தமிழ் மொழியை கற்று வருகின்றேன்" என்றும்  கூறினார் . இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர், நம்பியூர் தாசில்தார் ராணி, குறள் மலை சங்க தலைவர் ரவிக்குமார், பேராசிரியர் வெற்றிவேல், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்