
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் ''பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன்.இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி நிறுவனர் பிளஸ் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. அதை இங்கே சொல்ல முடியாது'' என தெரிவித்திருந்தார்.
பாமக வட்டாரத்தில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொடர்ந்து இரண்டு நாட்களாகவே பாமகவின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமாதானம் மேற்கொள்ள படையெடுத்து வருகின்றனர். இருப்பினும் சமாதானப்படுத்தும் முயற்சி தோல்வியிலேயே நீடிக்கிறது. நேற்று பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்திருந்தார். இருப்பினும் தான் இருக்கும் காலம் வரை நான்தான் பாமக தலைவர் என திட்டவட்டமாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 'தான் எடுத்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். யாரும் என்னை இது தொடர்பாக சந்திக்க வர வேண்டாம்' என ராமதாஸ் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.