உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சமீபகாலங்களில் நடந்துகொண்டிருந்தது. ஊழியர்கள் தங்களது சம்பளத்தை அதிகரிக்க கூறி கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த கோரிக்கையை நிராகரித்தது. இந்த நிலையில் இன்றும், நாளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் பைலட்கள் மற்றும் ஊழியர்கள் அறிவித்தனர். இதனால் நேற்று முதலே அந்நிறுவனத்தின் விமானங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்று வேலைநிறுத்தம் தொடங்கியதையடுத்து அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் இதே நிலைதான் தொடரும் என கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் இப்படி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் டிக்கெட் பதிவு செய்திருந்தவர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.