![Unmanned boat washed ashore in Rameswaram; Q Division Police investigating](http://image.nakkheeran.in/cdn/farfuture/kp1Vejc56YNsScjTPduPggXz7o_IVE-lsaKkJ-SdOag/1696915159/sites/default/files/inline-images/a1808.jpg)
ராமேஸ்வரத்தில் ஆட்கள் இல்லாத படகு ஒன்று கரை ஒதுங்கியது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் மண்டபம் பகுதியில் முனைக்காடு கடற்கரை பகுதியில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் ஆளில்லா படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட மீனவர்கள் உடனடியாக கடலோரப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கியூ பிரிவு போலீசார், அந்தப் படகை சோதனை செய்ததில், அந்தப் படகு இலங்கையைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.
அந்தப் படகில் கடலில் பிடிக்கப்பட்ட மீன்களும் ஒரு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படகு குறித்து அப்பகுதி மீனவர்களிடம் விசாரிக்கையில் அந்த படகில் இரண்டு இளைஞர்கள் இருந்ததாகவும் படகை கரையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் முனைக்காடு பகுதியில் மண்டபம் போலீசார் மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படகில் வந்த நபர்கள் யார், கடத்தலுக்காக வந்தார்களா என்ற கோணத்தில் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.