Skip to main content

புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணி; ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

Published on 03/12/2023 | Edited on 05/12/2023

 

Storm Prevention and Rescue Mission Appointment of IAS Officers

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்கென இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் (ஐஏஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் இன்று பிற்பகல் 7.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக் கடலில், புதுச்சேரியிலிருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையிலிருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரிலிருந்து 330 கிமீ தெற்கு தென்கிழக்காகவும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து 4.12.23 திங்கட்கிழமை முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கு ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கென தலா ஒரு இந்திய ஆட்சிப் பணி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Storm Prevention and Rescue Mission Appointment of IAS Officers

 

அதன்படி சென்னை மாநகராட்சியின் மண்டலம் - 1 கந்தசாமி, மண்டலம் - 2 திவ்யதர்ஷினி, மண்டலம் -3 சங்தீப் நந்தூரி, மண்டலம் - 4 எஸ். பிரபாகர், மண்டலம் - 5 கே. விஜய கார்த்திகேயன், மண்டலம் - 6 பி. கணேசன், மண்டலம் -7 எஸ். சுரேஷ் குமார், மண்டலம் 8 எஸ். பழனிச்சாமி, மண்டலம் 9 எம். பிரதாப், மண்டலம் -10 எஸ். அருண்ராஜ், மண்டலம் -11 இ. சுந்தரவள்ளி, மண்டலம்-12 ஏ.கே. கமல் கிஷோர், மண்டலம்-13 எம்.எஸ். பிரசாந்த், மண்டலம்-14 வி.ஆர். சுப்புலட்சுமி, மண்டலம் -15 கொ. வீரராகவ ராவ், தாம்பரம் மாநகராட்சி ஜான் லூயிஸ், ஆவடி மாநகராட்சி ஏ. சண்முக சுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் மீட்புப் பணிகள் மற்றும் பிற உதவிகளுக்கென 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் 1913 (சென்னை மாநகராட்சி), 18004254355, 18004251600 (தாம்பரம் மாநகராட்சி) மற்றும் 18004255109ஐ (ஆவடி மாநகராட்சி) பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்