ஈரோடு மாவட்டம் சென்னிமலை பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் 38 வயது ரவிக்குமார். கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கடந்த 12ந் தேதி மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த ரவிக்குமார் மது அருந்திவிட்டு ஊரில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்படியே அங்குள்ள அறைக்கு தூங்கச் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், நேற்று காலை ரவிக்குமாரின் உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது அறையில் செல்போன் உடைந்து கிடந்துள்ளது. வேறு அறையில் ரவிக்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு கீழே இறக்கி வைத்தனர்.
இதுகுறித்து சென்னிமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ரவிக்குமார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரவிக்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற விவரம் தெரியவில்லை. புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.