Skip to main content

'மூன்று முறை உயிர்த்தெழுந்திருக்கின்றேனா?' - முற்றுப்புள்ளி வைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அப்துல் ஹமீது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
'Am I resurrected three times?'-concluded host Abdul Hameed

90களில் தொலைக்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பிரபலமானவர் அப்துல் ஹமீது. இலங்கையைச் சேர்ந்த அப்துல் ஹமீது உயிரிழந்துவிட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தான் உயிரோடு இருப்பதாக இலங்கையிலிருந்து அப்துல் ஹமீத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''மாண்டவன் மீண்டு வந்து பேசுகின்றானே என்று சிலர் வியந்து நோக்கக்கூடும். நேற்று இலங்கை நேரப்படி நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நான் நித்திரை கொள்ளவில்லை. அந்தச் செய்தியைக் கேட்டு ஆயிரம் பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைப்பேசியில் என்னை அழைத்து என் குரலைக் கேட்டு பின்பு தான் நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்திக் கொண்டார்கள். அதிலும் சிலர் என் குரலைக் கேட்டதும் கதறி அழுததைக் கேட்டு என்னால் தாங்க முடியவில்லை. எத்தனையோ ஆயிரம் அன்பு உள்ளங்களை நான் பெற என்ன தவம் செய்து ஈன்றாளோ என் அன்னை என நினைத்துக் கொண்டேன்.

நேற்று இலங்கை பத்திரிகையில் நான் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். அந்தக் கட்டுரையின் ஆரம்பம் இப்படித்தான் இருந்தது 'மரணம் மனிதனுக்கு தரும் வரம். அவனைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகளை எல்லாம் மறக்கச் செய்து நல்ல பக்கத்தை மட்டும், நல்ல நினைவுகளை மட்டும் நிலைநிறுத்திப் பேசி மகிழ்வது' என அந்த வரிகள். அப்படி ஒரு அனுபவம்தான் எனக்கு கிடைத்திருக்கிறது. முதல் அனுபவம் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது என்னையும் என் மனைவியும் உயிரோடு கொளுத்தி எரித்து விட்டார்கள் என்றும் நான் இறந்து விட்டதாகவும் வதந்தி பரவியது. இங்கு மட்டுமல்ல தமிழகத்திலும் பரவி, பத்திரிகைகளிலும் பரவி, கேரளத்தில் மலையாள பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் யூடியூப் நடத்தும் ஒருவர் அதிக பணம் வருமானம் ஈட்ட வேண்டும் என்று பேராசையில் என்னுடைய படத்தை போட்டு பிரபல டி.வி தொகுப்பாளர் மரணம்; கதறி அழுதது குடும்பம் என்ற செய்தியைப் பதிவு செய்திருந்தார்கள். அது இரண்டாவது முறை. இது மூன்றாவது முறை. மூன்று முறை நான் உயிர்த்தெழுந்திருக்கின்றேனா என்று நகைச்சுவையாக எண்ணத் தோன்றுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரின் கடிதம்; கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகப்படுத்தி மத்திய அரசு பதில்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்தவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று முறை கடிதம்  எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், '1974ம் வருடம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையேயான ஒரு ஒப்பந்தத்தின் (கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) அடிப்படையில் மீனவர் பிரச்சனை ஆரம்பமானது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
10 Tamil Nadu fishermen arrested

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் வழக்கம் போல் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரைக் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீனவர்களின் விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்டனர். இதனையொட்டி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களையும், 3 விசைப்படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று (24.06.2024) ஒரு நாள அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.