Skip to main content

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Former PM VP Singh Birthday CM MK Stalin Respect 

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமான வி.பி.சிங்கின் 94 வது பிறந்த தினம் இன்று (25.06.2024) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Former PM VP Singh Birthday CM MK Stalin Respect 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, (20.04.2023) சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் ஆகியோரது வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரை சாலையில் உள்ள சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவக் கம்பீரச் சிலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து வி.பி. சிங் சிலையை கடந்த நவம்பர் 27 ஆம் தேதி (27.11.2023) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயா பகவதி பிரதாப் சிங் அவர்களுக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் வி.பி.சிங் இவர் செல்வ சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர். பின்னாளில் உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். 

Former PM VP Singh Birthday CM MK Stalin Respect

அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இட ஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை அமல்படுத்திய சமூக நீதி காவலர் வி.பி. சிங் ஆவார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சாத்தூர் வெடிவிபத்து; உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin announces relief to families of Chatur crackers victims

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்ப்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. 20 அறைகள் கொண்ட இந்த ஆலையில், இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று அறைகள் இடிந்து தரைமட்டமான நிலையில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்புப் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இந்த விபத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(42), சூரங்குடியைச் சேர்ந்த மாரிச்சாமி(44), சந்திரப்பட்டியைச் சேர்ந்த செல்வக்குமார்(44), மோகன்(50) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பட்டாசுக்கு ரசாயன மூலப்பொருள் கலவை கலக்கும் பணி செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி முதல்வரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பம்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Next Story

கோடநாடு விவகாரம்; சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
mk stalin said So far 268 witnesses have been examined in Kodanad case

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வருகிறது. அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மக்களவை தேர்தலில் செய்கூலி, சேதாரம் இன்றி 40க்கு 40 வெற்றியை மக்கள் அளித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை ஆய்வு செய்தால் 221 தொகுதிகளிலும் திமுக வென்றுள்ளது. 2026இல் வெற்றிபெற்றுடுவோம் என்ற மமதையில் கூறவில்லை, மனசாட்சிப்படியே கூறுகிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம். 

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 24 மணி நேரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் பணியிட மாற்றம், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் அரசின் நடவடிக்கைகள் போதவில்லை எனக்கூறுவது தோல்வியை மறைக்கும் முயற்சி. ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் பேசியபோது இனி கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அல்லது அதனால் எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்தான் பொறுப்பு. அதனால் கடும் நடவடிக்கையை எடுங்கள் என்று கூறியிருக்கிறேன். 

கள்ளச்சாராயம் போன்றே போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவர்களுடைய வங்கிக் கணக்குகளை முடக்கி, சொத்துகளைப் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படு வருகிறது. அரசு எதையும் மறைக்க வில்லை; முழுமையாக விசாரித்து வருகிறது.

கோடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருப்பவர்களிடம் இன்டர்போல் உதவியுடன் விசாரித்து வருகிறோம். தமிழ்நாடு சட்ட ஒழுங்கை காப்பதில் வெற்றிகரமாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காவல்துறைக்கான 190 அறிவிப்புகளில் 179 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றுபவர்களின் மன அழுத்தத்தைப் போக்க, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழ்நாடு இன்று இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக உயர்ந்துவருகிறது. தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு, மனித வளர்ச்சி குறியீடு என எல்லா வகையிலும் வளர்ச்சியடைந்துள்ளது.” என்றார்.