Skip to main content

‘பேக் டூ ஃபார்ம்’ - ராகுலின் செயலால் உறைந்துபோன நாடாளுமன்றம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Rahul gandhi performance in Parliament has surprise many people

இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறுபக்கம், இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி.. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தியை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

இன்னொருபுறம், 18வது மக்களவைக்கான சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 26ம் தேதியான இன்று நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததால்.. தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரைத் தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன. அதற்காக, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அழுத்தம் தந்ததாகவும் செய்திகள் உலாவின.

முன்னதாக மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு.. ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது, அரசியல் சாசன பிரதியைக் கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆரவாரக் கோஷங்களை எழுப்பி தங்களது பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தினர். பின்னர், சபாநாயகர் இருக்கைக்குச் சென்று அவருக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்கூறி ராகுல் கை குலுக்கினார். அப்போது, நாடாளுமன்ற பாதுகாவலர் எனச் சொல்லப்படும் நபர்கள் இருவர் நின்றனர். அதுவரை பதவியேற்ற ய யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ராகுல் சக மனிதனை மதிக்கும் விதமாக, அவரிடம் வலியச் சென்று கைகுலுக்கினார். அவருடன் நின்ற மற்றொருவரிடமும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுதான் தலைமைப் பண்பு.. இவர்தான் தலைவர் எனப் பலரும் இந்த வீடியோ காட்சியைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல.. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கேரள மாநிலத்தின் மாவேலிக்கரை தொகுதியின் எம்.பி.யுமான அவர், எட்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று முற்பகல் 11 மணிக்கு மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்கள் வழி மொழிந்தனர். இதேபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் பெயரை திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். அப்போது, பிரதமர் மோடி இன்முகத்தோடு ராகுலை அழைத்தார். இதனால் சபை ஆர்ப்பரித்தது. பின்னர், அனைவரும் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசினர். ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றது ஜனநாயகத்துக்கு புது ரத்தம் பாய்ச்சப்போகிறது எனக் காங்கிரசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

பாஜக மத்தியில் 5 ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விகுறிதான்? - 'இந்து' என்.ராம்! 

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Hindu N. Ram said question mark is whether BJP will stay in central for 5 years

இந்தியாவில் முக்கியமான பத்திரிகையாளர்களில் ஒருவர், பல நாடுகளுக்கு பயணித்து பத்திரிகையாளராக பணிபுரிந்தவர். மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அவர்களை நக்கீரன் சிறப்பு பேட்டிக்காக சந்தித்தோம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் குறித்தும் சம கால அரசியல் செயல்பாடுகள் குறித்தும் நம்முடைய கேள்விகளுக்கு தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

மூத்த பத்திரிக்கையாளரான நீங்களும், ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதியும் பிரதமர் மோடியிடமும், ராகுல்காந்தியிடமும் ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு அழைத்தீர்கள்? அதுக்கு என்ன பதில் வந்தது? எப்படி இதை செய்தீர்கள்? 

அரசியல் ஞானமுள்ள நண்பர் ஒருவர் தான் இப்படி செய்யச் சொல்லி பரிந்துரைத்தார். முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் மிகவும் தைரியமானவர், நன்றாக எழுதவும் பேசவும் கூடியவர். அவரையும் வைத்துத் தான் இந்த விவாதத்திற்கான கடிதத்தை மிகவும் கவனத்துடன் எழுதி அனுப்பினோம். மீடியா யாருக்கும் தெரிவிக்காமல் முதலில் பிரதமர் தரப்பிற்கே அனுப்பினோம். அவர்களது தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் இது குறித்து கேள்வி கேட்ட போது ராகுல்காந்தி மீடியாவிற்கும் பதிலளித்தார். எங்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார்.  பிரதமர் தரப்பிலிருந்து பதில் வரும் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படியான ஒரு விவாதத்தை வெளிக்கொண்டு வர வேண்டும். இந்தியாவின் வளர்ச்சி, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கிராமப்புற வேலைவாய்ப்புகள், ஜி20 நாடுகளில் கீழ் இடத்தில் இருக்கிறது இது குறித்தெல்லாம் பேசியே ஆக வேண்டும் என்று நினைத்தோம்.  ராகுல்காந்தி இது குறித்து ஒரு பேசினார், பொருளாதாரத் துறையிலும், சமுதாயத் துறையிலும் நாடு சமநிலையற்ற தன்மையில் இருக்கிறது என்றார். ஆனால் இதை அப்படியே பாஜக தரப்பிலிருந்து கொச்சைப்படுத்தி, உங்களது தாலியை எல்லாம் பிடுங்கிக் கொள்வார்கள் என்று தவறாக பேசினார்கள். அசிங்கமாக நடந்து கொண்டார்கள் தான். ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை. 

பல பிரதமரை பார்த்த உங்களுக்கு மோடி உடன் ஒப்பிடுகிற அளவிற்கு வேறு யாரேனும் தலைவர்கள் இருக்கிறார்களா? 

இவர் ஒரு புது மாதிரியான ஆளாக இருக்கிறார். 18 வருடங்களாகவே தனிப்பட்ட முறையிலேயே தெரியும். போன் பண்ணுவார், தமிழகம் வந்தால் பார்ப்பார். நிறையா விசயங்கள் குறித்து பேசுவோம். மாநில உரிமைகள் குறித்து கூட முதல்வராக இருந்த போது குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் பிரதமர் ஆனதுமே முழுமையாக மாறி விட்டார். தலைமை பொறுப்பிற்கு வந்ததுமே அமித்ஷாவை வைத்து பழைய பாஜக தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, போன்றோர்களை ஓரங்கட்டினார். 

நீங்க குறிப்பிட்ட தலைவர்களுடன் பாஜகவில் சுஷ்மா சுவராஜ், பிரமோத் மகாஜன் போன்றவர்களெல்லாம் முன்னால் இருந்தார்கள். இப்போது அப்படியான அடுத்தகட்ட தலைவர்கள் இருக்கிறார்களா? 

நிதின் கட்கரி, யோகி ஆதித்யநாத் எல்லாரும் இருக்காங்க, ஆனால் அவங்க எல்லாருக்கும் மோடி மீது முரண்பாடு இருக்கிறது. அமித்ஷா கூட இருக்காரு, ஆனால் இந்த முறை அவரையுமே பெரிதாக கண்டுகொள்ளாதது போல் தான் மோடி நடந்து கொள்கிறார் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. வேற தலைவர்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஆனால் மோடி அளவிற்கு அவங்க ஆதிக்கம் செலுத்த முடியாது. 

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு யோகி-மோடி முரண் எதாவது காரணமாக இருக்குமா?

மாநில ஆட்சியில் யோகி ஆதித்யநாத் மீது எந்த விமர்சனமும் இல்லை என்று தான் சொல்லப்படுகிறது. ஆனால் அமித்ஷாவிற்கு பிடிக்காததால் யோகி கட்சியில் ஓரங்கட்டப்படுகிறார். இவர்களை விட மோசமான இந்துத்துவவாதி அவர், ஆனால் தலைமையில் ஒத்துழைப்பு இல்லாததால் எலெக்சன் ரிசல்ட் அப்டி வந்திருக்கிறது. முன்னெல்லாம் பாஜகாவில் நிறையா பேர் அடுத்தடுத்த இடத்தில் இருப்பார்கள். ஆனால் இப்போது அந்த கட்சியைப் பொறுத்தவரை மோடியின் இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் கூட்டணி ஆதரவோடு ஆட்சி அமைக்கிறவர்கள் ஐந்து ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்வார்களா? அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் நடைபெறுமா?

பாஜக முந்தைய ஆட்சியைப் போல மாநிலங்களை நசுக்குதல் வேலையை செய்ய முடியாது. ஆளுநரைக் கொண்டு அங்கு சிக்கலை உண்டாக்க முடியாது, குறிப்பாக தமிழக ஆளுநர் மாநில திட்டங்கள் எதுவாக இருந்தாலும் தடுப்பதும் பிறகு உச்சநீதிமன்றத்தில் திட்டு வாங்குவதுமாக இருக்கிறார். இனிமேல் அப்படியெல்லாம் செய்ய முடியாது தான். சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் தங்களுடைய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார்கள். ஐந்து ஆண்டுகள் நிலைக்குமா என்பது கேள்விக்குறி தான். நிலைக்குமா? நிலைக்காதா? என்று ஜோசியம் சொல்ல முடியாது.  சொந்த கட்சியில் கூட யாரையும் தலைதூக்க கூட விடாத அளவுக்கு பார்த்துக் கொள்கிற மோடி, இவ்விருவரின் விசயத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக் கொள்வார்தான் என்று நினைக்கிறேன். 

காங்கிரஸ் கட்சியினர் இந்த தேர்தல் மூலமாக ஆட்சி அமைக்காவிட்டாலும் அதை ஒரு ஒரு வெற்றியாக நினைத்துக் கொள்ளலாமா?

வெற்றி தோல்வி என்பது அரசியல் அதிகாரத்தை வைத்து மட்டுமே முடிவெடுக்க கூடாது. அவர்களுடைய குறிக்கோள் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், காங்கிரஸ் படிப்படியாக பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அதை ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் எனலாம். பாஜகவினர் காங்கிரஸை வெற்றி பெறவில்லை கொச்சைப்படுத்துகிறார்கள். அதெல்லாம் அரசியலில் நடப்பது தான். ஆனால் காங்கிரஸில் நல்ல மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காதது கூட காங்கிரஸிற்கு பின்னடைவை உருவாக்கி இருக்குமோ?

சமீபத்தில் சரத்பவார் உடன் பயணித்துக் கொண்டிருந்த போது சொன்னார். முந்தைய காலகட்டங்களில் எல்லாம் கூட பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் வேலை செய்திருக்கிறோம். வாஜ்பாயி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய தேர்தலில் கூட எதிரே யார் என்று கேள்விக்குறியை வைத்து செய்த பிரச்சாரம் வென்றது. பத்து வருடங்கள் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இந்த முறையும் அப்படித்தான் முயன்றோம். ஆனால் இந்த முறை சோனியாகாந்தியை அறிவித்து இருந்திருக்கலாம் என்றார். 

சரத்பவார், மம்தா பேனர்ஜி எல்லாம் காங்கிரஸிலிருந்து வெளியே வந்தவர்கள் என்பதால் ராகுல்காந்தியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களா?

அப்படி இல்லை, சரத்பவார் ஏற்றுக் கொள்வார். கார்கேவை கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டாலும் அவரே ராகுல்காந்தி தான் பிரதமராக வேண்டும் என்று சொன்னவர். ஆனால், ராகுல்காந்தியோ தன்னைத்தான் எல்லோரும் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற டிமாண்டை வைக்காத சிறந்த தலைவர். 2019-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சிப் பொறுப்பிலிருந்து விளகியவர். களத்தில் இறங்கிட்டாருன்னா தயக்கமில்லாமல், தைரியமாக வேலை செய்வார்.  ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட காலத்திலிருந்து சின்ன பையனாக இருந்த ராகுல்காந்தியை பார்த்து வருகிறேன். அவர் தன்னை உருவாக்கிக் கொண்ட விதம் என்பது தனித்துவமானது தான்.

இந்த ஆட்சி என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

முதலாவதாக ஐந்து ஆண்டுகள் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆர்.என்.ரவியை வாபஸ் வாங்க வேண்டும். நிதித்துறையில் நெருக்கடி தராமல் மாநிலங்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய வேண்டும். மாநில தலைமைகளை நசுக்க கூடாது. பத்திரிகை சுதந்திரத்தை பேச்சு எழுத்து சுதந்திரத்தை தாக்குவதை நிறுத்தணும். நிறுத்தா விட்டால் போராட்டம் நடக்கும். எலெக்சன் கமிசன் நேர்மையாக செயல்பட வேண்டும். வெளிநாடுகளுடனான உறவை மேம்படுத்த வேண்டும், குறிப்பாக பாகிஸ்தான் உடன் நல்லுறவை பேண வேண்டும். காஸாவில் நடக்கும் கொடுமைகளை கண்டிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.  

தேர்தலுக்கு பிறகான இந்த கருத்துக்கணிப்புகள் எப்படித்தான் எடுக்கப்படுகிறது? 

தேர்தல் நடக்கும் இடத்திற்கே தற்காலிக தன்னார்வலர்களை நியமித்து அவர்களைக் கொண்டு வாக்களித்து வருகிறவர்களிடம் கேட்டு அதனைக் கொண்டு ஒரு தரவினை உருவாக்கி கணிப்பாக வெளியிடுவார்கள். அது சரியாகவும் இருக்க கூடும், தவறாகவும் இருக்கக்கூடும். இந்த முறை கருத்துக்கணிப்புகள் தேர்தலை எந்த வகையிலும் பாதிக்கவில்லை. ஆனால் மக்களை உளவியல் ரீதியாக பாதித்தது. அதே சமயத்தில் பங்குச்சந்தையையும் பாதித்தது.