Skip to main content

கிராம சபைக்கூட்டத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம்!; சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள்!!

Published on 15/08/2018 | Edited on 27/08/2018

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2018) நடந்த கிராம சபைக்கூட்டங்களில் சொல்லி வைத்ததுபோல் விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் அனைத்து கிராமங்களிலும் மக்களை திரட்டி கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் 12618 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது.

 

salem 8 way

 

 

 

சேலம் - சென்னை இடையில் ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வனத்துறை, தனியார் பட்டா நிலங்கள் என 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் பெரும்பகுதி சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால், எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் விளை நிலத்தை விட்டுத்தர மாட்டோம் என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு 8 சதவீத விவசாயிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

 

எட்டு வழிச்சாலைக்கு எதிரான எதிர்ப்புக்கனல், சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த கிராம சபைக்கூட்டங்களிலும் எதிரொலித்தது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்ற யூகம் கிளம்பியதால், கிராம சபை க்கூட்டம் நடந்த இடங்களில் எல்லாம் போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். கிராம மக்களும் அதிகமாக கூடிவிடக்கூடாது என்பதற்காக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், கிராம சபைக்கூட்டம் பற்றி எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், சேலத்தை அடுத்த குள்ளம்பட்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசுத்தரப்பில் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி கிளர்க் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

 

salem 8 way

 

 

 

குள்ளம்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கிரிதரன், வெற்றிவேல் ஆகியோர், எட்டு வழிச்சாலையால் குள்ளம்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதோடு, இயற்கை வளங்களும் சுரண்டப்படும் அபாயம் உள்ளதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்று விவசாயிகள் கோரினர். இதற்கு குள்ளம்பட்டி கிராம உதவியாளர் வடிவேல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தீர்மான பதிவேட்டை  கையில் எடுத்துக்கொண்டு அந்தக் கூட்டத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்.எட்டு வழிச்சாலைக்கு எதிராக கிராம சபையில் விண்ணப்பம் பெறப்பட்டு, சேலம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படுகிறது என்று மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் வடிவேல் கூறினார். இதனால் விவசாயிகள் தரப்புக்கும் அவருக்கும் வாக்குவ தம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த ஏத்தாப்பூர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

 

 

அரசுத்தரப்பு பார்வையாளராக வந்திருந்த அயோத்தியாபட்டணம் பேரூராட்சி உதவியாளர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் வருமாறு செல்போனில் தகவல் கொடுத்தார். ஆனால் அவர் வர தாமதம் ஆனதால், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். பிறகு நீண்ட இழுபறிக்குப் பின்னர், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் ஏற்கப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படுகிறது என்று திருத்தம் செய்து தீர்மான பதிவேட்டில் கிராம உதவியாளர் வடிவேல் எழுதினார். அத்துடன், குள்ளம்பட்டி பொதுமக்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த தீர்மான மனுவையும் அந்த பதிவேட்டில் சேர்த்துக் கொண்டனர். அதன்பிறகு, தெருவிளக்கு, கழிப்பறை வசதி கேட்டும் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

 

 

இதேபோல் பாரப்பட்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்திலும் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த அரசுப்பிரதிநிதிகள், கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேற முயன்றனர்.இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டனர். இதையடுத்து மீண்டும் கூட்டத்திற்கு வந்து அமர்ந்த அதிகாரிகள், எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தை தங்களது பதிவேட்டில் எழுதிக் கொண்டனர்.பூலாவரி கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் தலைமையில், பொதுமக்கள் எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது அதை பதிவு செய்ய அரசுப்பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த மக்கள், கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர். அரசுத்தரப்பில் வந்திருந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொதுமக்கள் யாரும் வராததால், அவர்களும் கிளம்பிச் சென்றனர். இதனால் பூலாவரியில் மட்டும் கிராம சபைக்கூட்டம் இன்று முழுமையாக நடைபெறவில்லை.

 

 

 

 

குப்பனூர் கிராமத்தில் விவசாயி நாராயணன் தலைமையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக்கோரி தீர்மானம் கொண்டு வந்தனர். அங்கேயும் பொதுமக்கள் எழுதிக் கொண்டு வந்தபடி தீர்மானத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்தனர். இதனால் குப்பனூர் கிராமத்தில் சபைக்கூட்டத்தை முடிப்பதில் நீண்ட நேரம் ஆனது.பின்னர் இருதரப்பும் சமாதானம் ஆன பிறகு, ''குப்பனூர் ஊராட்சியில் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்கள் கொண்டு வரும் விண்ணப்பத்தினை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்று பதிவு செய்தனர்.இதேபோல், காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களில் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.