Skip to main content

ஏர்போர்ட்டுக்குள் சென்ற எளியவர்கள் வாகனம்!

Published on 12/04/2025 | Edited on 12/04/2025

 

durai vaiko Autos allowed to drop off passengers at Trichy airport

திருச்சி விமான நிலையத்தினுள் பயணிகளை இறக்கி விட ஆட்டோக்களுக்கு அனுமதி; இன்னும் மூன்று வாரத்தில் எக்ஸ்பிரஸ் கொரியர் சேவையும் தொடங்கப்படும் என அறிவிப்பு; பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மைக் வைக்கும் மேசை ஏற்பாடு என மக்களுக்கான எனது எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றி தரும் அதிகாரிகளுக்கு நன்றி  என மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோர் ஏழை எளிய நடுத்தர மக்கள். தங்கள் குடும்பப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் இவர்களில் அடங்குவர். இவர்கள் டாக்ஸியைவிட ஆட்டோக்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர், ஏனெனில் அது அவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவெங்கும் உள்ள விமான நிலைய வளாகங்களுக்குள் ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, ஆட்டோக்களை விமான நிலைய வளாகத்தின் உள்ளே அனுமதிப்பது, எக்ஸ்பிரஸ் கொரியர் சேவையை கொண்டுவருவது, சுங்கத்துறை அதிகாரிகளுடன் விமான பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களை சரிசெய்வது, இஸ்லாமிய பயணிக்களுக்காக வருகை மற்றும் புறப்பாடு இடங்களின் தொழுகை கூடம் அமைப்பது, விமான ஓடுதள விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து, 

durai vaiko Autos allowed to drop off passengers at Trichy airport

நான் சேர்மேனாக பொறுப்பேற்ற ஏர்போர்ட் அட்வைசரி கமிட்டியின் (Chairman - Airport advisory committee) முதல் கூட்டத்தில் 5 மாதங்களுக்கு முன்பு எடுத்துரைத்தேன்.  அதில் விடுபட்டிருந்த மூன்று முக்கிய கோரிக்கைகளான எக்ஸ்பிரஸ் கொரியர் சேவை தொடர்பாகவும், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது மைக் வைப்பதற்கான மேசையை வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளில் அமைத்துத் தர வேண்டுமெனவும், ஆட்டோக்களை விமான நிலைய வளாகத்திற்குள் முழுமையாக அனுமதிக்க முடியாவிட்டாலும், குறிப்பிட்ட தூரம் வரையாவது அனுமதிக்க வேண்டுமெனவும், மூன்று முக்கிய கோரிக்கைகளை,  சமீபத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் திருச்சிக்கான முதல் உள்நாட்டு விமான சேவையான சென்னை-திருச்சி விமானத்தைத் தொடங்கி வைத்து, அதில் பயணித்து திருச்சி வந்தபோது, என்னை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற, இந்திய விமான நிலைய ஆணைய திருச்சி இயக்குனராக புதிதாக பொறுப்பேற்றுள்ள திரு. எஸ். ஞானேஸ்வர ராவ் அவர்களிடம் எடுத்துரைத்தேன்.

அதன்படி, எனது மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளது திருச்சி விமான நிலைய நிர்வாகம். கொரியர்  நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, எக்ஸ்பிரஸ் கொரியர் சேவையை  இன்னும் மூன்று வாரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பால் திருச்சி விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் பொருளாதார வளர்ச்சி பெரும். 

மேலும், ஆட்டோக்கள் வருகைப் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் வரை சென்று பயணிகளை இறக்கிவிடவும்  அனுமதிக்கப்பட்டுள்ளது.  இதனால், தங்கள் பொருட்களின் சுமையோடு நெடுந்தூரம் நடக்க வேண்டியிருந்த பயணிகளுக்கு இது ஒரு நிவாரணமாக அமையும். அத்துடன், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் மேம்படும். அதுபோல பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் கூட இவ்வளவு சிறப்பான மைக் வைக்கும் மேசை இல்லை எனும் அளவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மேசையும் தயார் நிலையில் இருந்தது.

durai vaiko Autos allowed to drop off passengers at Trichy airport

ஞானேஷ்வர ராவ் அவர்களை நான் சந்தித்து பேசிய ஓரிரு வாரத்திற்குள் இந்த அறிவிப்பை வெளியிட்டு, எனது மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ள இந்திய விமான நிலைய ஆணைய இயக்குனர் (Director -  AAI Trichy)  எஸ். ஞானேஸ்வர ராவ் அவர்களை இன்று (12.04.2025) திருச்சி விமான நிலைய வளாகத்தில் சந்தித்து பூங்கொத்து வழங்கி எனது சார்பிலும், திருச்சி விமான நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் சார்பிலும், ஆட்டோ ஓட்டுநர்கள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றிய திருச்சி விமான நிலைய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  அத்துடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது என்னை சந்தித்து நன்றி தெரிவிக்க  வந்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இடம் உங்கள் வாகனத்தை போலவே உங்களுக்கும் ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினேன்.

திருச்சி விமான நிலைய மேம்பாட்டிற்காக நாம் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அதன் அடிப்படையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவையை கொண்டுவர பணியாற்றினோம். அதன் அடிப்படையில் திருச்சி - சென்னை விமான சேவையும், திருச்சி - மும்பை விமான சேவையும் தொடங்கியது. அதன் அடுத்த கட்டமாக திருச்சி - ஹைதராபாத், திருச்சி - டெல்லி நேரடி உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன். மக்கள் நலன் ஒன்றே ஒவ்வொரு செயலிலும் என் ஒரே இலக்கு. அது நிறைவேறுகையில் கிடைப்பது ஒன்றே என் மனநிறைவு” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்