நெல்லை மாவட்டத்தின் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. 10க்கு மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் இந்த தருணத்தில், இந்த மழை பெய்வதால், அனைவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரம் குளத்தூள்வாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் அய்யலுசாமி (55) இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று வழக்கம் போல ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, திடீரென பலத்த மழை பெய்ததால், தனது ஆடுகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர் நிலம் அருகே வந்தபோது, அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் கம்பத்திற்கு செல்லும் வயர் திடீரென அறுந்து ஆடுகள் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 11 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.