









எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள் உப்பு நகர் மாவட்டத்தையே வெடவெடக்க வைத்திருக்கிறது.
பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனுபவிக்கும் மவுன டார்ச்சர்களை விசாரிக்க, விசாரிக்க கிளம்பிய விபரீதங்கள் உறைய வைப்பவை.
அந்த மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு கார்மெண்ட் டெக்னாலஜி பாடப் பிரிவில் பயில்கின்ற மூன்று மாணவிகளும் கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியரால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் ஒரு மாணவி கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வருபவர் மற்ற இரண்டு மாணவிகளும் டே ஸ்காலர்கள். அதில் 17 வயதுடைய ஒரு மாணவி அந்தப் பகுதியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவராம். எப்பவுமே வீட்டில் கலகலப்பாயிருக்கிற முகாம் மாணவி பேராசிரியரின் தொடர் பாலியல் தொந்திரவால் மனம் வெந்து கலகலப்பின்றி சோர்வான நிலையில் முகம் வாடிப்போய் சரியாகச் சாப்பிடாமல் வீட்டில் அமைதியாய் இருந்திருக்கிறாராம்.
இதே போன்ற மனநிலையில் தான் மற்ற இரண்டு மாணவிகள் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக முகாமைச் சேர்ந்த அந்த 17 வயது மாணவியின் அண்மைப் போக்கை தற்செயலாகக் கவனித்த அவளின் பெற்றோர்கள், அவளிடம் என்னவென்று ஆதரவாய் விசாரித்தவர்கள், என்ன நடந்தாலும் தயங்காமல் சொல் என்று மகளைத் தைரியப்படுத்தியிருக்கிறார்கள்.
அதையடுத்தே கண்ணீர் முட்ட கல்லூரியில் பேராசிரியர் தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததை நடந்தவைகளை விவரித்திருக்கிறார்.
தான் கல்லூரியின் லேபிலிருந்த போது வந்த பேராசிரியர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதும் எனக்கு உசுரு போன மாதிரி இருந்துச்சு. பின் கல்லூரி வளாகத்தில் தனியே இருக்கும் அவரது துறையின் அறைக்கு வரச் சொல்லி மிரட்டுவார். அங்க போனதும் என்னிடம் பாலியல் தொந்தரவு சீண்டல்களில் ஈடுபடுவார். வெளிய சொல்ல முடியாத சம்பவங்கள்லாம் நடந்திருக்கு.
நடந்தத வெளிய சொன்னா நீ இந்தக் கல்லூரியிலயே படிக்க முடியாதபடி பண்ணிருவோம். வெளியேத்திறுவேம்னு மிரட்டுவார். நா, என்ன பண்ணுவேன் படிப்பாச்சே. அவரு தொந்தரவ தாங்கிக்கிட்டோம். ஆனா இது ரெண்டு மாசமா தொடர்ச்சியா என்கிட்ட இப்படி நடந்திட்டிருந்தார். என்ட்ட மட்டுமல்ல என்னோட வகுப்பு ரெண்டு மாணவிகள்ட்டயும் இப்படித்தான் பாலியல் தொல்லை குடுத்திருக்கிறார். என்று சொல்ல. பதறிப் போன பெற்றோர் உடனடியாக இதனைப் புகாராக கல்லூரியின் முதன்மையானவரிடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதை விசாரிக்க வேண்டிய முதன்மையானவரோ, பிரச்சனை வேண்டாம் பிள்ளையோட படிப்பு கெட்டுப் போயிடும். விட்டுடுங்க. அவங்க பெரிய ஆளுங்க. அவர் பிரச்சனை பண்ணுவார். நீங்க இலங்கைத் தமிழர் முகாமில் இருக்க முடியாது. அதனால விட்டுடுங்க என்று சொன்னதும் அதிர்ந்த பெற்றோர்களோ விசாரிச்சு நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என உறுதியாய் சொல்லியிருக்கிறார்கள். அதே சமயம் அந்தப் பேராசியரால் பாதிக்கப்பட்ட மற்ற இரண்டு மாணவிகளும் முதன்மையானவரிடம், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளையும் தெரிவித்திருக்கிறார்கள். விவகாரம் பெரிதானதை அடுத்தே முதன்மையானவர் மாணவிகளின் புகார்களை கல்லூரியின் விசாகா, கமிட்டியின் விசாரணைக்கு அனுப்பியிருக்கிறார்.
ஆனால் கல்லூரியின் விசாரணை கமிட்டியோ முதன்மையானவரை விட பலமாக விபூதியடித்திருக்கிறதாம். மூன்று மாணவிகளிடமும் விசாரணையை நடத்திய கமிட்டி, புகார் வேண்டாம். கல்லூரியின் பெயர் கெட்டுவிடும். ஏற்கனவே சென்னை பாலிடெக்னிக்கில் நடந்த இது போன்ற சம்பவத்தால் பெரிய பிரச்சனையானது அசெம்ப்ளி வேற நடந்திட்டிருக்கு. வேண்டாம் விட்டுருவோம் என்றிருக்கிறார்களாம். விசாரணையின் போது மாணவிகள் பேராசிரியரால் தங்களுக்கு தரப்பட்ட பாலியல் தொல்லைகளை அப்பட்டமாக முழுக்க விவரித்தது முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தொடர்ந்து மெம்பர்களோ, கேட்டா அப்படி சொல்லாதீங்க. மாத்திச் சொல்லணும்னு மாணவிகளிடம் வற்புறுத்தியிருக்கிறார்களாம். இதனிடையே விசாரணை போகும் போக்கை ஆரம்பத்திலிருந்தே கவனித்து வந்த கமிட்டியின் மெம்பர் ஒருவரோ, தன்னிடம் கமிட்டி தயாரித்து நீட்டிய விசாரணை ரிப்போர்ட்டில் கையெழுத்திட முடியாது. என்று மறுத்தவர் உங்களின் அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படியாகயில்லை. நீங்கள் குற்றவாளிக்கு ஆதரவாக முடிக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்காலத்தை, நலனைப் பாக்கல என்று ஓங்கிச் சொல்லி விட்டு வெளியேறியிருக்கிறாராம்.
இதையடுத்து இந்த சம்பவம் நகரின் முக்கியமான அந்த சமூக நல ஆர்வலர் புள்ளிக்கு தெரியவர, அதிர்ந்த அவரோ தாமதிக்காமல் மாவட்டக் கலெக்டரான இளம் பகவத்திடம் தெரிவித்திருக்கிறார். கலெக்டரின் தலையீட்டிற்குப் பிறகே கல்லூரிக்குள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் நுழைந்திருக்கிறார்கள். மாணவிகளிடம் விசாரணை நடத்திய மகளிர் காவல் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மாணவிகள், மற்றும் அந்தப் பேராசிரியரையும் தங்கள் கஸ்டடிக்குள் கொண்டு வந்தவர்கள் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
விசாரணைக்குப் பின்பு பேராசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து மாணவிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.
இச்சம்பவத்திற்குப் பிறகே கல்லூரியில் தொடர் சம்பவமாகி விட்ட இந்த பாலியல் சீண்டல்கள் வெளிவரத் தொடங்கி அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கின்றன.
குறிப்பாக மாணவி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவியின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார். பீதியாகிப் போன அந்த மாணவி கல்லூரியின் முதன்மையானவரிடம் புகார் கொடுக்க, அந்த பேராசிரியரோ, நான் அப்படி நடக்கல. பாடம் சம்பந்தமாக் கேட்டேன். மாணவி பதில் சொல்லாமப் போனப்ப கையைப் பிடிக்க வேண்டியதாயிற்று என எற்ற இறக்கமாகச் சொல்ல, முதன்மையானவரோ அந்த மாணவியின் புகாரைக் கிழித்துப் போட்டிருக்கிறாராம்.
தற்போது மூன்று மாணவிகளின் புகாருக்குள்ளான அந்தப் பேராசிரியர் மீது ஏற்கனவே இது போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறன்றனவாம். அவைகள் முறையாக விசாரிக்கப்படவில்லை. காரணம் அந்தப் பேராசிரியரின் உறவினர்கள் அரசு உயர் பதவிகளிலிருப்பதால் அதைக் கொண்டே தப்பித்து வந்திருக்கிறார். அந்தப் பேராசிரியரின் உறவுப் பவர் தான், கல்லூரியின் முதன்மையானவரை பம்ம வைத்திருக்கிறதாம். அதுதான் அவர் இதுவரையிலும் நடவடிக்கையிலிருந்து தப்பியதற்கு காரணம் என்கிறார்கள்.
இக்கல்லூரியில் மாணவிகளுக்கு ஏற்பட்ட தொடர் பாலியல் சீண்டல் புகார்களே ஆயிரம் மாணவிகளுக்கு மேல் பயின்ற இங்கு தற்போது 292 மாணவிகளாகச் சுருங்குவதற்கு அடிப்படை என்றும் அவர்களும் சமூகத்தில் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
தற்போது மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் வெளியேறி விவகாரம் சீரியஸான நிலையில், கொதித்துப்போன கல்லூரி மாணவிகள், குற்றச்சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும் நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தாசில்தார் சுபா பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
இந்தச் சம்பவங்களில் முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளிடம் அழுத்தமான மனுக்கொடுத்தவர் கோவில்பட்டி நகர கருத்துரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவரான தமிழரசனிடம் பேசியபோது.
குற்றச்சாட்டிற்குள்ளான பேராசிரியர் தன்னுடைய பேக்ரவுண்ட்டைக் கொண்டே தப்பித்து வந்திருக்கிறார். கல்லூரியில் உள்ள மாணவிகளின் பல புகார்கள் விசாரிக்கப்படாமலேயே கடந்திருக்கின்றன. அது தான் தொடர் சம்பவங்களின் அடிப்படைக்காரணம். பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் வந்திருக்கிறது. ஆரம்ப கட்டமாக அவர் மீது கல்லூரி முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கலை. ஆழமான விசாரணையை மேற்கொண்டால் பல சம்பவங்கள் வெளியேறலாம். இதில் குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர் மட்டுமல்ல, சம்பவங்களுக்கு உடந்தையாகச் செயல்பட்டவர்களின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனுக் கொடுத்து வலியுறுத்தியிருக்கிறோம்'' என்றார்.
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேபி லதாவைத் தொடர்பு கொண்ட நாம், அனைத்தையும் தெரிவித்துக் கேட்டதில். அப்படியில்லை. மாணவிகளின் புகார் பற்றி நாங்கள் என்ன ப்ரொசீஸரோ அதன்படி முறையாக விசாரித்து வருகிறோம். தற்போதும் அதன்படி கல்லூரி கமிட்டி விசாரித்து வருகிறது. அதன் பிறகே நடவடிக்கை என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
பள்ளியும், பாலியல் சீண்டல்களும் பிரிக்க முடியாதது என்று வரலாறு பேசிவிடக் கூடாது.