ஓகி புயல்: குமரியில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த மஜக கோரிக்கை!
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/4/New Folder/405.jpg)
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மஜக கோரிக்கை விடுத்துள்ளது.
மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஓகி புயலால் கன்னியாக்குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டிருகிறது. அங்கு மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதோடு, மக்களின் அன்றாட வாழ்வும் முடங்கியுள்ளது.
தமிழக அரசின் சார்பில் அங்கு முகாமிட்டிருக்கும் அமைச்சர்களின் வழிகாட்டுதலின் படி அங்கு நடைப்பெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேலும் தீவிரப் படுத்தப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நூற்றுக் கணக்கான மீனவர்களின் நிலை என்னவென தெரியவில்லை. அவர்களை மீட்க கடலோர காவல் படை,கடற்படை மற்றும் விமான படையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஓகி புயலால் உயிர் இழந்த ஓவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் தலா பத்து லட்சம் ரூபாயை ஆறுதல் நிதியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.
இது தவிர வீடுகளை இழந்தவர்கள், மீன் பிடி படகுகள் மற்றும் உடமைகளை இழந்தவர்கள், கால் நடைகளை பறி கொடுத்தவர்கள்,விவசாய ரீதியாக இழப்புகளை சந்தித்தவர்கள் ஆகியோரின் இழப்புகளை கண்டறிந்து உரிய நீவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.