Skip to main content

பெரியார் பல்கலை. துணைவேந்தரின் ரீ என்ட்ரி; கொஞ்சம் மிரட்டல், நிறைய புலம்பல்!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Conversation between Periyar University Vice-Chancellor Professors

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்ட பிறகு நடந்த கல்வி ஆண்டு துவக்க உரையில், கடந்தகால செயல்பாடுகள் குறித்து புலம்பியும், ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசியிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர், ஜெகநாதன். இவருடைய  பதவிக்காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இவரும், முன்பு நிரந்தர  பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேலும் சேர்ந்து கொண்டு பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. இது தொடர்பாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.   இந்நிலையில், கடும் விமர்சனங்களுக்கிடையே, 2025 மே 19ம் தேதி வரை மேலும்  11 மாதங்களுக்கு ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி,  கடந்த ஜூன் 29ம் தேதி உத்தரவிட்டார். இது உயர்கல்வித்துறையில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பெரியார் பல்கலை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆளுநர், ஜெகநாதனைக் கண்டித்து ஜூலை1, 2 தேதிகளில் பல்கலை  முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோடை விடுமுறைக்காலம் முடிந்து பெரியார் பல்கலை ஜூலை 1ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் துணைவேந்தர் அனைத்து ஆசிரியர்களையும் சந்தித்துப் பேசுவது நடைமுறையில் இருக்கிறது. அதன்படி, ஜூலை 2ஆம் தேதி நடப்புக் கல்வி ஆண்டுக்கான துவக்க உரையாற்றினார் துணைவேந்தர் ஜெகநாதன். இதற்கான மேடையில், துணைவேந்தருடன் பதிவாளர் (பொறுப்பு)  விஸ்வநாதமூர்த்தி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கதிரவன் ஆகியோரும் அமர்ந்து இருந்தனர். 27 துறைகளைச் சேர்ந்த 120 உதவி, இணை மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய  பதிவாளர், துணைவேந்தரை பேச அழைத்தார். 

ஊழல் புகார், கைது, பதவி நீட்டிப்பு என பல்வேறு சர்ச்சைகள் சுழன்றடித்து வரும் நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் என்ன பேசப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது. அவர் எப்போது எந்த மேடை ஏறினாலும், 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை' என்ற திருக்குறளைச் சொல்லி பேச்சைத்  தொடங்குவார். நேற்றைய (ஜூலை 2) துவக்க உரையிலும் இந்த குறட்பாவைச் சொல்லியே பேசத் தொடங்கினார். அவர் கோவை வேளாண் பல்கலையில் பேராசிரியராக பணியாற்றியவர் என்பதால் உழவின் பெருமையைச் சொல்லும் வகையில், நிகழ்ச்சிகளில் இந்த  திருக்குறளோடு பேச்சைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகச்  சொல்லப்பட்டது. அடுத்து, தனக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு நன்றி சொல்லிவிட்டு, சில துறைகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பது ஏன்? என்று கேட்டு டாப் கியரில் எகிறத் தொடங்கினார்.     

''சில துறைகளில் மாணவர் சேர்க்கைக் குறைந்துள்ளது. குறிப்பாக, நூலக  அறிவியல் துறையில் ஒரே ஒரு மாணவர்தான் சேர்ந்துள்ளார். கல்வியியல்  துறையில் ஒருவர்கூட சேரவில்லை. மாணவர்களே இல்லாமல் ஆசிரியர்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்  சரியாக பாடம் நடத்தி இருந்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது. ஆளே இல்லாமல் எதற்காக இந்தத் துறைகளை வைத்திருக்க வேண்டும்? பேசாமல் இந்த  துறைகளை மூடி விடலாம். நமக்கு மாணவர்கள்தான் விளம்பர தூதர்கள். ஒரு துறை சரியாக இருந்தால் மாணவர்கள் வெளியே அதைப்பற்றி நல்லவிதமாகச் சொல்வார்கள். நமக்கும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கும். ஆனால் அவர்கள் வெளியே வேறு  விதமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதற்காக ஆசிரியர்கள் எல்லோரையும் குற்றம் சொல்லவில்லை. 'நாக்' கமிட்டி  வந்தபோது, ஆசிரியர்கள் எல்லோரும் இரவு, பகலாக வேலை செய்ததை  மறக்கவில்லை.

ஒரு துறையில், மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் குறைவாக போட்டுள்ளனர். பிடித்த மாணவர்கள், பிடிக்காத மாணவர்கள் என்று பாரபட்சம் பார்க்க வேண்டாம். நாம் மாணவர்களுக்காகத்தான் இருக்கிறோம். இப்போதுகூட மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி  வருகின்றன. எல்லா துறைகளிலும் சேர்க்கைக் குறைந்து விட்டதாகச் சொல்ல  முடியாது. ஒரு சில துறைகளில்தான் குறைவாக உள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அவற்றைக் களைய நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா விஷயங்களையும் ஊடகங்களில் தவறாக சித்தரித்து பரப்புவதால்  யாருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நம்மை மற்றவர்கள் அசிங்கமாக  நினைக்க மாட்டார்களா? சங்கம் என்று சொல்லிக்கொண்டு ஒருத்தர் மட்டும்தான் இருப்பார் பாருங்க. அவரும், இன்னும் சிலரும் என்னைப் பற்றித் தப்பு தப்பாக ஊடகங்களில் பேட்டி  கொடுக்கின்றனர். 

Conversation between Periyar University Vice-Chancellor Professors

வெளியில் இருந்து மூன்றாம் நபர்களும் தவறான  செய்திகளைப் பரப்புகின்றனர். தேசிய அளவிலான தர வரிசையில் 70வது இடத்தில் இருந்த பெரியார்  பல்கலையை இப்போது 49வது இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம். இனி அதேபோன்ற தர வரிசை கிடைக்குமா? என்பது  சந்தேகம்தான். ஆசிரியர்கள் மீது புகார்கள் வருவதன் பேரில்தான் விசாரணைக்குழு  அமைக்கிறேன். நடவடிக்கை எடுக்கிறேன். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?  என்னிடம் உங்களுக்கு பிடிக்காதது எதுவாக இருந்தாலும் நேரில் சொல்லலாம். அதைவிட்டுவிட்டு ஏன் ஊடகங்களில் பேசுகிறீர்கள்? புகார் வந்தால் நடவடிக்கை  எடுப்பேன். உதவி பேராசிரியர் ஒருவர் என்னைப் பற்றி ஊடகங்களில் பேட்டி கொடுக்கிறார்.  அவருடன் சேர்ந்து கொண்டு இன்னும் சிலரும் பேசுகிறார்கள். இத்தனை நடந்தும்  ஒருவர்கூட, துணைவேந்தர் தவறானவர் இல்லை என்று சொல்லாதது வருத்தம்  அளிக்கிறது.

அகமதிப்பீட்டுத் தேர்வுகள் எல்லாம் ஒழுங்காக நடத்தணும். மதிப்பீடு பணிகளைச் சரியாக பண்ணுங்க. இன்னும் 11 மாதங்கள் நான் இங்குதான் இருக்கப் போகிறேன். தொடர்ந்து பல்கலை வளர்ச்சிக்கு நிறைய பணிகளைச் செய்வேன். செய்து கொண்டுதான் இருக்கிறேன். ஒரு சிலரால் அதில் தடங்கல் ஆகிறது. சேலம் உத்தமசோழபுரத்தில் சோலார் திட்டம் கொண்டு வர நடவடிக்கை  எடுக்கப்பட்டு வந்தது. என்னை கைது செய்த பிறகு அந்த திட்டம் கைநழுவிப் போய்விட்டது. சேலத்தில் உள்ள முன்னாள் எம்.பி., ஒருவர் எத்தனையோ பேருக்கு மாணவர் சேர்க்கைக்காக கேட்டிருக்கிறார். நானும் சேர்க்கை அனுமதி கொடுத்திருக்கிறேன். ஆனால் நான் கைது செய்யப்பட்டபோது எனக்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. அதேநேரம், நாமக்கல்லில் உள்ள முன்னாள் எம்.பி., ஒருவர்  எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார். இப்போதும் நான் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்.  நீங்களும் எழுதுங்கள். எதைச் செய்தாலும் பல்கலை வளர்ச்சிக்கென்று செய்யுங்கள்,'' என நிறைய புலம்பலும், கொஞ்சம் மிரட்டலுமாகப் பேசி முடித்தார்  துணைவேந்தர் ஜெகநாதன்.

''உங்கள் சொந்தப் பிரச்சனையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள். என்னால் முடிந்ததை செய்கிறேன்,'' என்று இறங்கி வந்து பேசியபோதும்  ஆசிரியர்களிடையே எந்த ரியாக்ஷனும் இல்லை. மேலும் அவர், ''ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்ததைக்கூட தவறாக சித்தரித்து விட்டனர். அவருடனான சந்திப்பு  யதேச்சையாக நடந்ததுதான். அவரிடம் கூட பெரியார் பல்கலை வளர்ச்சிக்காக  உதவி கேட்டு புரபோசல் அளித்திருக்கிறேன். ஆனால் இந்த சந்திப்பைக்கூட தவறாக சித்தரித்து விட்டனர். ஊடகங்களில் தப்பு  தப்பாக பரப்பி விட்டனர். அப்போதுகூட ஆசிரியர்கள் யாருமே என்னை ஆதரித்துப் பேசவில்லை. ஏன் இந்தப் பல்கலையில் ஆசிரியர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்குப் புரியவே இல்லை,'' என மீண்டும் புலம்பினார்.

உரையை முடிக்கும்போது திடீரென்று ஒரு பஞ்ச் டயலாக்குடன் நிறைவு செய்ததுதான் ஹைலைட். ''நான் இறைவனை நம்பவில்லை. இயற்கையை நம்புகிறேன். இயற்கை என்றைக்குமே பொய் சொல்லாது. அது கண்டிப்பாக நம்மை தண்டிக்கும். கொரோனா காலத்தில் இயற்கை எப்படி தண்டித்ததோ, அதுபோல என்னைப் பற்றி  தவறாக பேசுபவர்களையும் இயற்கை ஒருநாள் தண்டிக்கும்,'' என சாபம் விட்டு  உரையை நிறைவு செய்தார் துணைவேந்தர் ஜெகநாதன். அவர் கஷ்டப்பட்டு பஞ்ச் வசனத்துடன் முடித்தாலும், கூட்டத்தில் இருந்த பேராசிரியர்கள் யாருமே அதை கைத்தட்டி உற்சாகப்படுத்தவில்லை.  எல்லோருமே அமைதியாக அமர்ந்து  இருந்தனர். பகல் 12 மணிக்குத் தொடங்கிய கூட்டம், 45 நிமிடங்களில் முடிந்தது. துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்காக சம்பிரதாயத்துக்குக் கூட  மேடையில் அவருக்கு யாரும் வாழ்த்துச் சொல்லவோ, சால்வை அணிவிக்கவோ  வரவில்லை. அவருடைய ஆதரவு பேராசிரியர்களும் வாழ்த்துச் சொல்வதை  தவிர்த்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அரை லிட்டர் குடிநீர் பாட்டில்,  இனிப்பு, மசால் வடை, தேநீர் / காபி வழங்கப்பட்டது. அதேநேரம், துணைவேந்தரின் பேச்சுக்கு பேராசிரியர்கள் மத்தியில் சில விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

Conversation between Periyar University Vice-Chancellor Professors

இது தொடர்பாக பேராசிரியர்களிடம் பேசியபோது, ''சேலத்தில் உள்ள முன்னாள் எம்.பி., என்று பெயரைச் சொல்லாமல் சொன்னாலும் அவர் எஸ்.ஆர்.பார்த்திபனைத்தான் சொல்கிறார். அதேபோல, நாமக்கல்லில் உள்ள முன்னாள் எம்.பி., என்றால், இப்போது பாஜகவில் உள்ள கே.பி.ராமலிங்கத்தை மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார். துணைவேந்தரின் பாஜக பாசம்தான் கே.பி.ராமலிங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேச வைத்திருக்கிறது. ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டவருக்கு ஆளுங்கட்சி சிட்டிங் எம்.பி., ஆக இருப்பவர் எப்படி உதவி செய்ய முடியும்? மாணவர் சேர்க்கை இல்லாத துறைகளில் ஆசிரியர்களுக்கு எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும் என்று துணைவேந்தர் கேட்கிறார். அதில் நியாயம்  இருக்கிறது. அதேநேரம், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த முதல்வர்கள்  வெங்கடேஸ்வரன், மருதமுத்து, செல்வவிநாயகம், வெங்கடேசன், கார்த்திகேயன் ஆகியோர் பல்கலை பணிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டனர். 

பல்கலைக்கழகத்தில் முதல்வர் பணியிடமே இல்லாத நிலையில் அவர்களை சும்மாவே வைத்துக்கொண்டு ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய்க்கு மேல் வெட்டியாக சம்பளம் கொடுத்து வருகிறார். இவர்களில் மருதமுத்து மட்டும் அண்மையில் ஓய்வு பெற்று விட்டார். இதையும் துணைவேந்தர் கவனத்தில் கொண்டு பேசியிருக்க வேண்டும்.   ஊழல் புகார்கள் குறித்துதான் ஊடகங்களில் பேராசிரியர்கள் சிலர் பேசி வருகின்றனர். அதற்காக அவர்களை சக ஆசிரியர்கள் ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. இதே நிலைப்பாட்டைதான் துணைவேந்தர் விவகாரத்திலும் பின்பற்றுகிறோம். மேலும், துணைவேந்தரே தனக்குப் பிடிக்காத ஆசிரியர்களுக்கு எதிராக சிலரை தூண்டிவிட்டு பெட்டிஷன் போட வைக்கிறார். அதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்,'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.

துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரியார் பல்கலையில் இன்னும் என்னென்ன ஏழரைகள் நடக்கப் போகிறதோ எனக் கமெண்ட் அடிக்கிறார்கள் பேராசிரியர்கள். 

 

Next Story

அதிமுக பிரமுகர் படுகொலை; 9 பேர் கைது - சேலத்தில் உச்சக்கட்ட பரபரப்பு 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
9 people arrested in Salem AIADMK executive Shanmugam case

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம்(60). இவர், கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சியின் மண்டலக் குழு தலைவராக இருந்துள்ளார். தற்போது, இவர் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியின் அதிமுக செயலாளராக இருந்து வந்தார். சமீபகாலமாக சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து அடிக்கடி புதிய புதிய எண்ணிலிருந்து கால் வந்துள்ளது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில் சண்முகம், சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோயில் தெரு பகுதிக்கு, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், சண்முகத்தை வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் அன்னதானப்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் அதிமுகவினர் அந்தப் பகுதியில் ஒன்று கூடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி துடித்து கண்ணீர் விட்டனர். மேலும் இறந்துபோன சண்முகத்தின் உறவினர்கள் கொலை செய்த நபர்களை கைது செய்யும் வரையிலும், உடலை வாங்கமாட்டோம் என அரசு மருத்துவமனையிலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் உறவினர்களிடம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அதிமுகவினருக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், மாநகர் காவல் துணை ஆணையர் மதிவாணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திலிருந்து உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் இவர், சந்துக்கடை வியாபாரம் குறித்தும் லாட்டரி விற்பனை குறித்தும் போலீசாருக்கு அடிக்கடி தகவல் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “நாங்கள் ஏற்கனவே சொல்வதுபடி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் காணப்படுகிறது. அதற்கு அதிமுக தொண்டர் பலியாகி இருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட கொலையாளிகளை கைது செய்யவேண்டும். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் " எனத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், சண்முகம் கொலை வழக்கில் சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி எனச் சொல்லப்படும் சதீஷ், அருண்குமார், முருகன் உட்பட 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில்.. திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்தாரென கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாகச் சண்முகத்தின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்த நிலையில், தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
AIADMK leader killed; 8 people including DMK executive arrested

சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.

காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

AIADMK leader killed; 8 people including DMK executive arrested

இந்நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வார்டு கவுன்சிலரின் கணவரான திமுக நிர்வாகி சதீஷ் அந்தப் பகுதியில் லாட்டரி சீட்டு மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் சண்முகமும் சதீஷும் நெருங்கிய நண்பர்களாக இருந்து லாட்டரி விற்பனை உள்ளிட்ட தொழில்களை செய்து வந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில் இவர்களுக்குள் தொழில் மற்றும் அரசியல் ரீதியாகவும் போட்டி ஏற்பட்டு தனித்தனியாக பிரிந்து விரோதிகளாக இருந்து வந்தனர். இந்நிலையில் சதீஷ் தனிப்பட்ட முறையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததால் அது குறித்து சண்முகம் காவல்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் புகார் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ் அதிமுக நிர்வாகி சண்முகத்தை கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.