Skip to main content

ஜாபர் சாதிக் விவகாரம் - மீண்டும் அமீருக்கு வந்த நோட்டீஸ்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
jaffer sadiq case ncb notice to ameer

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையாகத் திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி டெல்லியிலுள்ள தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அமீர் தனது வழக்கறிஞருடன் கடந்த 2ஆம் தேதி (02.04.2024) ஆஜரானார். அப்போது அமீரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் சென்னை தியாகராய நகர் ராஜன் தெருவில் உள்ள அமீர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப். (C.R.P.F.) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று சென்னையில் தியாகராயர் நகர், வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

இதற்காக சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் உள்ள அமீரின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றிருந்தனர். அப்போது அவர் வீட்டுக் கதவு திறக்கப்படாததால் அமலாக்கத் துறை அதிகாரிகள் 20 நிமிடங்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது. பின்பு கதவு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக அமீரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், விசாரணைக்கு வரும்போது கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்திய வங்கி கணக்குகள், மூன்று ஆண்டுகளாக தன் குடும்பத்தின் பெயரில் வாங்கிய சொத்துகள் மற்றும் ஜாபர் சாதிக் உடன் தொழில் கூட்டாளியாக இணைந்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை அமீர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனிடையே போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு, அமீருக்கு புதிதாக எந்த சம்மனும் அனுப்பவில்லை என்றும் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான நினைவூட்டல் கடிதம் மட்டுமே அனுப்பப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்