!["You are the educator who attracted the youth" - Governor of Tamil Nadu praises Rajinikanth!](http://image.nakkheeran.in/cdn/farfuture/GXoHkZD_DqgOJCsQMjW4fN2kpW8T-mVpvEePtUpvYKo/1635226637/sites/default/files/inline-images/rnr333.jpg)
டெல்லியில் விஞ்ஞான் பவனில் நேற்று (25/10/2021) காலை 11.00 மணிக்கு 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் விருதுகளைப் பெற்றனர். திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது. இதற்கு முன்பு தமிழில் எல்.வி. பிரசாத், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே. பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இம்முறை ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
திரைத்துறையின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருதைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துக்கு ஆளுநர் எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், "இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்திய திரைப்பட உலகில் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப் பெற்ற அங்கீகாரமான 'தாதா சாகேப் பால்கே' தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதொரு பொன்னாளாகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலை சிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களைக் கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.