![cuddalore chidamparam gold and two wheeler issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/kFLKIf-ChWq2I1V0tOCk6ZkHujFRkM3-J9luIExwqwI/1672467554/sites/default/files/inline-images/01-villupuram-gold-bike-art.jpg)
சிதம்பரம் பகுதியில் 3 இடங்களில் 45 பவுன் நகைகளும் மற்றொரு இடத்தில் இரு சக்கர வாகனத்தையும் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சிதம்பரம் நகரக் காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை வாகனத் தணிக்கை செய்யும் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த வாலிபர் சிதம்பரம் சின்னக்கடை தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் வெங்கடேஷ் (வயது 23) என்றும், இவர் சிதம்பரம் பகுதியில் பல்வேறு இடங்களில் நகைகளைத் திருடியதும் தெரியவந்தது.
காவல்துறை விசாரணையில், சிதம்பரம் பள்ளிப்படையில் அப்துல் மஜீத் மகன் ஜகபர் அலி (56) வீட்டில் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருடியதும், பள்ளிப்படை முத்துக்குமரன் மனைவி கலைவாணி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகைகள் திருடியதும், சிதம்பரம் ஞானப்பிரகாசம் தெரு பெட்டிக்கடையில் அன்னாள் கஸ்பால் என்ற பெண்ணிடம் 5 பவுன் தாலிச்சரடு திருடியதும், மேலும் சிதம்பரம் எஸ்.பி.கோயில் தெருவில் சாலையோரம் நின்றிருந்த மாலிக் பாஷா என்பவரது இருசக்கர வாகனத்தை திருடியதும் தெரியவந்தது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் இருந்து 45 பவுன் நகைகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 20 லட்சம் எனக் காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.