
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கீழ் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கோமதி கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும், இரு மகன்களையும் கணவரிடம் விட்டுவிட்டு வந்து விட்டார்.
இந்த சூழலில் தண்ணீர் கேன் போட வந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கிளின்டன் என்பவருக்கும் கோமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டு காந்திநகரில் ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதனிடையே கிளின்டன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து கோமதியிடம் தகராறு செய்துவந்துள்ளார். இதுதொடர்பாக தனது தாயிடம் கோமதி, எனக்கு எதுவும் வாங்கிதர மறுக்கிறார். மற்றவர்களுக்கு எல்லாம் ஓடிப் போய் செய்கிறார்” என்று புலம்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று கிளின்டன் கோமதியிடம் வெளியே சென்று வருவதாக கூறி கிளம்பி சென்றிருக்கிறார். பின்னர் திரும்பி வந்த பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் கதவைத் தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாக பதில் வராததால் கிளின்டன் கதவு ஓட்டை வழியாக பார்த்துள்ளார். அப்போது கோமதி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து கோமதியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்க அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே கோமதி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.