தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தை விற்க முயன்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே பச்சைக்கல் லிங்கம் பதுக்கப்பட்டு, கடத்தப்படவிருப்பதாக அறிந்த சிலைத் திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர், சிலைகளை வாங்கும் வியாபாரிகளை போல கடத்தல் கும்பலை அணுகினர். அதைத் தொடர்ந்து சிலையைக் கடத்த முயன்ற பக்தவத்சலம் (வயது 46), பாக்யராஜ் (வயது 42) ஆகிய இருவரை கைது செய்தனர். அத்துடன், தொன்மையான பச்சைக்கல் லிங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பச்சைக்கல் லிங்கம் ஐநூறு ஆண்டுகள் தொன்மையானது என்றும், நேபாள பாணியில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பச்சைக்கல் லிங்கத்தின் மதிப்பு ரூபாய் 25 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.