
வேலூர் மாவட்டம் காட்பாடியில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16 -ம் தேதி நள்ளிரவு, தனியார் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு வந்த தனியார் மருத்துவமனை (CMC ) பெண் மருத்துவர் மற்றும் அவருடன் வந்த ஆண் நண்பர் இருவரையும், பயணிகள் ஆட்டோ என்று கூறி ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வேலூர் பாலாற்றுப் பகுதிக்கு கடத்தி சென்று அங்கு பணம், ரூ 40 ஆயிரம் மற்றும் நகை, செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு பெண் மருத்துவரை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், வேலூர் சத்துவாச்சாரி வா.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ)மண்டை மற்றும் 17-வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகு இவர்களில் பார்த்திபன், மணிகண்டன் ( எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ) மண்டை மற்றும் ஒரு சிறுவன் என 5-பேரை வேலூர் மாவட்ட மகிளிர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஒரு சிறார் சென்னையில் உள்ள கெலீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மற்ற குற்றவாளிகளான பார்த்திபன், மணிகண்டன் (எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது 2022 ஏப்ரல் 15ஆம் தேதி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இந்த வழக்கு வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் 4-பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை தலா 25 ஆயிரம் அபராதம் வேலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி பானு ரேகா தீர்ப்பு வழங்கினார். சிறுவனுடைய வழக்கு மட்டும் வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சிறுவனுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டது. வேலூர் போக்சோ நீதிமன்றம் விதித்த தீர்ப்பில், பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.23,000 அபராதமும் விதித்தும் உத்தரவிடப்பட்டது.