Skip to main content

 தனிமைப் பெண்ணிற்கு வலைவீசிய வில்லாதி ஜொள்ளன்!  -காவல்துறையின் கோணல் கொண்ட பார்வை! 

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

நமது அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பேசிய பெண்ணின் கதறல் கணவனைப் பிரிந்துவாழும் ஒவ்வொரு தனிமைப்பெண்ணும்  அனுபவிக்கும் வேதனையாக இருந்தாலும் தன்வழிப்படுத்த ஓர் ஆண் இப்படியெல்லாம்கூட பாலியல் தொந்தரவு செய்வானா? என்று அதிர்ச்சியூட்டுகிறது அவரது குற்றச்சாட்டு. 

 

t

 

சென்னை போரூர் மவுலிவாக்கத்தைச்சேர்ந்த தமிழ் ஆசிரியை தனலட்சுமி நம்மிடம், “பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டா காவல்நிலையத்துக்குப்போயி புகார் கொடுக்கலாம். ஆனா, காவல்துறையின் உதவியுடன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டா என்ன செய்றது? திருமணமாகி குழந்தைபெற்ற அவனது வக்கிரப்புத்தியால பிரபல இண்டர்நேஷனல் பள்ளியில் 38,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு ‘பெஸ்ட் டீச்சர் அவார்டு’ விருதுபெற்ற  நான்  இப்போ வேலையை இழந்து வாங்கின கடன்களுக்கு வட்டி கட்டமுடியாம இரண்டு பெண் குழந்தைகளை வெச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கேன். ஆனாலும், அவனோட டார்ச்சர் தொடர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு. கணவனை பிரிந்து வாழ்ந்தாலே அவளுக்கு இந்த சமுதாயத்துல பாதுகாப்பு கிடைக்காதா? என்று நக்கீரனிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்து கண்ணீர் வடிக்கிறார் தனலட்சுமி.  

 

    சுரேஷ்பாபு

s

 

என்ன நடந்தது? 2016 ஆம் ஆண்டு சென்னை முடிச்சூரில் இடம் வாங்கித்தருவதாக ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜசேகர் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக 2018 பிப்ரவரி மாதம் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார் பள்ளி ஆசிரியர் தனலட்சுமி. அப்போதுதான், சுரேஷ்பாபு என்பவர் தனலட்சுமியை தொடர்புகொண்டு “உங்களைப் போலவே நானும் புரோக்கர் ராஜசேகரிடம் பணம் கொடுத்து ஏமாந்துட்டேன். அதனால, நாம ரெண்டுபேரும் சேர்ந்து புகார் கொடுத்து போராடலாம்’ என்கிறார். அதற்குப்பிறகுதான், புரோக்கர் ராஜசேகரின் பிரச்சனையைவிட சுரேஷ்பாபுவின் பாலியல் டார்ச்சர் அதிகமானது என்கிற ஆசிரியர் தனலட்சுமி நம்மிடம், “நான் கணவரிடமிருந்து பிரிஞ்சிருக்கேங்கிறதை புரோக்கர் ராஜசேகர் மூலமா தெரிஞ்சுக்கிட்ட சுரேஷ்பாபு இரவு 12 மணிக்கு மேலல்லாம் வீடியோ கால் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஏமாற்றிய ராஜசேகருக்கு எதிரா போராடுவதைவிட சுரேஷ்பாபுவின் நோக்கம் வேறமாதிரி இருந்ததால் 2018 ஆகஸ்டு -4 ந்தேதி மடிப்பாக்கம் எஸ்.ஐ. செல்வராஜிடம் சுரேஷ்பாபு மீது புகார் கொடுத்தேன். ஆனா, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கல. அவன் மேல நான் புகார் கொடுத்துட்டேன்னு என்னை பழிவாங்குறதுக்காக நான், புரோக்கர்  ராஜசேகரின் மனைவின்னும்  ராஜசேகருடன் சேர்ந்து நானும் அவனிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும் அதே மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் சுரேஷ்பாபு பொய்ப்புகார் கொடுத்துட்டான்.

 

அதனால், காவல்நிலையம் சென்று நான்  புரோக்கர் ராஜசேகரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது குறித்த புகார்,  ராஜசேகர் பணத்தை எனக்கு திருப்பித்தருவதாக பத்திரத்தில் எழுதிக்கொடுத்தது… சுரேஷ்பாபு என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தது… அதுகுறித்து, மடிப்பாக்கம் எஸ்.ஐ செல்வராஜிடம் ஏற்கனவே நான் புகார் கொடுத்தது… சுரேஷ்பாபுவோட ஆசைக்கு நான் இணங்கலைங்கிறதால புரோக்கர் ராஜசேகருடன் சேர்த்து என்னையும் கோர்த்துவிட்டுட்டான் என்று எல்லா ஆவணங்களையும் அப்போதைய, மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டரிடம் காண்பித்து விளக்கினேன். அதோடு, என்னை அனுப்பிட்டாங்க. 

 

கண்ணன்

க்

 

ஆனா, புதிதாக வந்த மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன்  2019 ஜூன் -3 ந்தேதி எனக்கு ஃபோன் பண்ணி, ‘உன்மேல எஃப்.ஐ.ஆர். போட்டாச்சு.  உன்னை ரிமாண்ட் பண்ணப்போறேன். உன் தலையெழுத்தையே மாத்தப்போறேன்’னு மிரட்டியதும் அதிர்ச்சியானேன். அதுமட்டுமில்ல, ஜூலை-1  ந்தேதி எஸ்.ஐ. ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் முருகன் என்கிற பெயர்களில் தொடர்ந்து சுரேஷ்பாபுவும் மடிப்பாக்கம் போலிஸாரும் நான் வேலை செய்யும் மயிலாப்பூர் எம்.சி.டி.எம். இண்டர்நேஷனல் பள்ளிக்கு ஃபோன் செய்ததால் பள்ளி நிர்வாகம் என்னை வேலையை விட்டே ரிசைன் பண்ணச்சொல்லிடுச்சு. மாதம் 38,000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டிருந்த வேலையும் இல்லாம ரெண்டு பொம்பள பிள்ளைங்கள வெச்சுக்கிட்டு லோன் கட்டிக்கிட்டு கஷ்டப்படுறேன்.

 

 அப்பவும் ஈவு இரக்கமில்லாத அந்த சுரேஷ்பாபு, ‘உன் மேல எந்த தப்பும் இல்லைன்னு மெசேஜ் அனுப்பினதோடு, மறுபடியும் இரவுநேரங்களில் தவறான மெசேஜ்களை அனுப்பி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதோடு என் மகள்கள் குறித்தும் விசாரிக்கிறான்.  நான், ஆரம்பத்திலேயே 2018 ஆகஸ்டு -4 ந்தேதி மடிப்பாக்கம் ஸ்டேஷனில் சுரேஷ்பாபு மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், அவன் என் மீது பொய்ப்புகார் கொடுத்து, நான் முன் ஜாமீன் எடுத்து, வேலையையும் இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது. இதைவிடக்கொடுமை, சுரேஷ்பாபு மீது கடந்த 2019 ஆகஸ்ட்-12-ந்தேதி ஆதாரங்களுடன் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஒருமாதமாகியும் புகார் மீது நடவடிக்கை எடுக்கல”என்று கண்கலங்குகிறார்.

 

ஜெயச்சந்திரன்

ஜ்

 

இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷ்பாபுவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ராஜசேகர் தனது மனைவி தனலட்சுமிதான் என்று சொல்லி 2017 ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கே அழைத்துச்சென்றார். இடம் வாங்க புரோக்கர் ராஜசேகரிடம் 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். ஆனால், அந்த இடத்தில் வில்லங்கம் இருப்பதால் பணத்தை திருப்பிக்கேட்டேன். ஆனால், பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் புரோக்கர் ராஜசேகர். அதனால்தான், அவர்மீது மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். காவல்துறை அவரை கைது செய்தது. தனலட்சுமி முன் ஜாமீன் வாங்கிவிட்டார்” என்றவரிடம் தனலட்சுமியும் ராஜசேகரும் கணவன் மனைவியா? என்று நாம் கேட்டபோது, ‘கணவன் மனைவியான்னு தெரியாது. அவுங்களுக்குள்ள நட்பு இருக்கு. ராஜசேகருடைய அக்கவுண்டிலிருந்து தனலட்சுமியின் அக்கவுண்டிற்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் ட்ரான்சக்சன் ஆகியிருக்கிறது” என்றவரிடம்,  அந்த இரண்டு லட்ச ரூபாய் தனலட்சுமிக்கு ராஜசேகர் தரவேண்டிய பணத்தைதான் திருப்பிக்கொடுத்ததாக தனலட்சுமி சொல்கிறார். 

 

சரி… நீங்கள் ஐந்து லட்ச ரூபாய் பணம் கொடுத்தது ராஜசேகரிடமா? தனலட்சுமியிடமா? தனலட்சுமியிடம் நீங்கள் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதா? தனலட்சுமியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாக புகார் கொடுத்திருக்கும்போது ஒரு பெண்ணிற்கு தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் வீடியோ கால் செய்வது… பாலியல் ரீதியாக வலைவீசும் மெசேஜ்களை அனுப்பி தொந்தரவு செய்துக்கொண்டிருப்பது ஏன்? என்று நாம் கேட்டபோது அதுகுறித்து பேச மறுத்தவர், ‘ராஜசேகரும் தனலட்சுமியும் என்னிடம் 5 லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்ற எனது புகாருக்கு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ராஜசேகர் கைதுசெய்யப்பட்டதுபோல எந்த நேரத்திலும் தனலட்சுமி கைது செய்யப்படுவார்’ என்று மெசேஜ் மூலம் தெரிவித்தார். 


இதுகுறித்து, ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜசேகரின் செல்நம்பருக்கு தொடர்புகொண்டபோது, வேறொருவர் ஃபோனை அட்டெண்ட் செய்து,  “ராங் நம்பர் சார். நான், புதிதாக வாங்கிய நம்பர் இது” என்றார்.   


வலைவீசிய சுரேஷ்பாபு மீது வாட்ஸ்-அப் மெசேஜ் ஆதாரங்களுடன் மாங்காடு காவல்நிலையத்தில் இரண்டாவது முறையாக தனலட்சுமி புகார் கொடுத்து ஒருமாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? மாங்காடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது,  “நான் மாறுதலாகி வந்துவிட்டேன். புதிதாக வந்த இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கச்சொல்லுங்கள்” என்று சமாளித்தார்.  ‘இதற்கு அது பதில் இல்லையே’ என்று யோசித்தபடி நாம், மாங்காடு புதிய இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரிடம் கேட்டபோது,  “உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றவர் இதுகுறித்து அதிரடியாக வழக்குப்பதிவு செய்து சுரேஷ்பாபுவிடம் விசாரணை நடத்திவருகிறார். 


ஆசிரியர் தனலட்சுமியும் ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜசேகரும் கணவன் மனைவி அல்ல. தனலட்சுமிக்கு திருமணமாகி கணவரிடம் இருந்து  பிரிந்துவாழ்கிறார். ராஜசேகருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ராஜசேகரிடம் பணம் கொடுத்து ஏமாந்ததற்கான ஆதாரங்களை தனலட்சுமி காண்பித்ததுபோல ராஜசேகரிடமும் தனலட்சுமியிடமும் பணம் கொடுத்த ஆதாரத்தை சுரேஷ்பாபு நம்மிடம் காண்பிக்கவில்லை. எப்படியிருந்தாலும் பெண்ணிற்கு வலைவீசும் மெசேஜ்களை அனுப்புவது சட்டப்படி குற்றம். 

 

‘நோ என்றால் நோ தான். நோ என்பது வார்த்தை மட்டுமல்ல. அது, வாக்குமூலம்’ என்ற நேர்கொண்ட பார்வை அஜீத் வசனம்போல… ஒருவேளை இடம் வாங்க ராஜசேகரிடம் சுரேஷ்பாபு பணம் கொடுத்தது உண்மையாக இருந்தாலும் சுரேஷ்பாபுவின் குற்றச்சாட்டின்படி ராஜசேகர் அந்தப்பணத்தை தோழி தனலட்சுமியிடம் கொடுத்திருந்தாலும்கூட தனலட்சுமிக்கு பாலியல் தொந்தரவு செய்யும் விதமாக சுரேஷ்பாபு தொடர்ந்து ஃபோன்கால் செய்வது… வாட்ஸ்-அப் மெசேஜ்களை அனுப்புவது சட்டப்படி குற்றம். அதற்கான, தண்டனையை சுரேஷ்பாபு அனுபவித்தே ஆகவேண்டும். தனலட்சுமி புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காமல், கோணல் கொண்ட பார்வையுடன் செயல்பட்ட  மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன், மாங்காடு முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், எஸ்.ஐ. முத்துப்பாண்டி உள்ளிட்ட காவல்துறையினரும் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டியவர்கள். 

 

நேர்கொண்ட பார்வையுடன் தனலட்சுமியின் புகாரை விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மாங்காடு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார்,  சுரேஷ்பாபுவை சட்டரீதியாக கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதான், தனிமை பெண்களுக்கு வலைவீசும் ஜொள்ளன்களுக்கு சரியான தீர்வாக அமைவதோடு காவல்துறை, பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது என்ற எண்ணம் மக்களும் ஏற்படும்.  

சார்ந்த செய்திகள்